கூவாகம் கூத்தாண்டவர் கோயில்: தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்- அரவாண் களப்பலி
விழுப்புரம்: கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழாவில், ஆயிரக்கணக்கான திருநங்கைகள் செவ்வாய்க்கிழமை இரவு பூசாரி கையினால் தாலி கட்டிக் கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் 18 நாள்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா, ஏப்ரல் 29-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு முக்கிய நிகழ்வான சுவாமிக்கு கண் திறத்தல் நடைபெற்றது.
இதில் மும்பை, தில்லி, புனே, சென்னை உள்பட பல்வேறுப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
மணப்பெண்ணாய் மாறிய திருநங்கைகள்
திருநங்கைகள் தங்களை மணப்பெண்களைப் போல அலங்கரித்துக் கொண்டு கோயில் முன்பு கூடி பூசாரிகள் கைகளால் தாலி கட்டிக் கொண்டனர்.
ஆடிப்பாடி மகிழ்ந்தனர்
இரவு முழுவதும் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். வேண்டுதல் நிறைவேற ஆண்களும் தாலி கட்டிக் கொண்டனர்.
அழகிப் போட்டி
முன்னதாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் உதவியுடன் தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருநங்கையருக்கான அழகிப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் சென்னை, விழுப்புரம், உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த சேர்ந்த 25 திருநங்கைகள் கலந்து கொண்டனர். இதில் தூத்துக்குடி ஆர்த்தி ‘மிஸ் கூவாகம்' ஆக தேர்வு செய்யப்பட்டார். விழுப்புரம் சாந்தினி 2-ம் இடத்தையும், ஈரோடு சுபா 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
நடனப்போட்டி
முன்னதாக நடந்த நடனப் போட்டியில் முதலிடம் பிடித்த கோவை பத்மினி, 2-ம் இடம் பிடித்த சென்னை அஞ்சலி, 3-ம் இடம் பிடித்த சென்னை ஷீமா ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
அரவாண் தோரோட்டம்
புதன்கிழமையான இன்று அரவாண் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அரவாணுக்கு சூறைத் தேங்காய் உடைப்பார்கள். கோயிலின் வடபுறத்தில் உள்ள சகடையில் 30 அடி உயரக் கம்பம் நட்டு வைக்கோல் பிரி சுற்றி அரவாண் திருவுருவம் அமைக்கப்படும். பிறகு தேரோட்டம் நடைபெற்றது.
அரவாண் களப்பலி
தொடர்ந்து தேர் பந்தலடியில் உள்ள அழிகளம் நோக்கி சென்றது. அங்கு அரவான் களப்பலி நிகழ்ச்சி நடந்தது. அதுவரை ஆடிப்பாடி மகிழ்ந்து இருந்த அரவாணிகள் தங்களது தாலியை அகற்றி, பொட்டினை அழித்து, வளையலை உடைத்து, ஒப்பாரி வைத்து அழுதனர். இந்தக்காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது.
சோகமயமாகும் திருநங்கைகள்
பின்னர் திருநங்கைகள் அங்கிருந்த கிணற்றில் குளித்து வெள்ளை ஆடை உடுத்தி விதவைக்கோலம் பூண்டனர். சோகத்துடன் தங்களின் சொந்த ஊருக்கு சென்றனர்.
தர்மர் பட்டாபிஷேகம்
15-ஆம் தேதி விடையாத்தியும், 16-ஆம் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது.
மகாபாரதப் போர்
இவ்விழா வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே போர் மூண்டபோது, போர் நடப்பதற்கு முன் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமானால் யுத்த தேவதையை திருப்திபடுத்துவதற்கு களப்பலி கொடுக்க வேண்டி இருந்தது.
அரவாண் களப்பலி
இதற்கு 32 சாமுத்திரிகா லட்சணமும் பொருந்திய ஆண் மகனை பலி கொடுக்க வேண்டும். அர்ச்சுனனுக்கும், நாகக்கன்னிக்கும் பிறந்த அரவாண் மட்டுமே இதற்கு பொருத்தமானவர்.
அரவாண் திருமணம்
கிருஷ்ணன் மோகினி அவதாரம் எடுத்து அரவாணை மணம் முடிக்கிறார். மறுநாள் அரவாண் களப்பலி கொடுக்கப்படுகிறார். அப்போது தலை துண்டாகியும் உயிர் போகவில்லை.
கூத்தாண்டவராக மாறிய அரவாண்
அதுபோல் கடைசி ஆசையாக மகாபாரதப் போரில் 8-ஆவது நாள் சண்டை அவருக்கு கொடுக்கப்படுகிறது. அப்போரில் அவர் வெறும் சிரத்துடன், வாயில் கத்தியை கவ்விக்கொண்டு குதித்து, குதித்து போரிட்டார். இதனால் அரவாண், கூத்தாண்டவர் என அழைக்கப்பட்டார். இதனை நினைவு கூறும் விதமாகவே ஆண்டுதோறும் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திருவிழா நடைபெறுகிறது.