ஐ படத்துக்கெதிராக சென்சார் அலுவலகம் முன் திருநங்கையர் ஆர்ப்பாட்டம்!
சென்னை: ஷங்கரின் ஐ படம் தங்களை இழிவுபடுத்துவதாகக் கூறி திருநங்கையர் மற்றும் திருநம்பியர் இன்று சென்னையில் உள்ள தணிக்கைக் குழு அலுவலகம் முன் போராட்டம் நடத்துகின்றனர்.
ஷங்கர் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான ஐ படம் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தப் படத்தில் வில்லன்களில் ஒருவராக ஓஜாஸ் ரஜினி என்ற திருநங்கை இடம் பெற்றுள்ளார். இவர் வரும் காட்சிகளை அருவருக்கத்தக்க வகையில் அமைத்துள்ளார் இயக்குநர் ஷங்கர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாலியல் ரீதியாக அவர்களைக் கொச்சைப்படுத்துவதாகவும் திருநங்கைகள் சார்பில் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தப் படத்துக்கு எதிராக ஏற்கெனவே ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர் திருநங்கைகள். இயக்குநர் ஷங்கர் வீட்டு முன் முதல் போராட்டத்தை நடத்திய அவர்கள், அடுத்து இப்போது சென்சார் அலுவலகம் எதிரில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்த அறிவிப்பில், "ஷங்கரின் ஐ 'திரைமலத்தை' எதிர்த்து திங்கள் கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சென்சார் அலுவலகத்தை திருநங்கையர் - திருநம்பியர் உரிமைக் குழு சார்பாக முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்," என்று கூறியுள்ளனர்.