ஏர்இந்தியாவில் பணி தர மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்- திருநங்கை ஷானவி முதல்வருக்கு மனு!
திருநங்கை என்பதால் ஏர் இந்தியாவில் பணி மறுக்கப்படுவது குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஷானவி முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை : திருநங்கை என்பதை காரணம் காட்டி ஏர் இந்தியாவில் பணி தர மறுக்கும் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஷானவி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் இது குறித்து ஷானவி மனு ஒன்றையும் அளித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஷானவி பொன்னுசாமி, தனது குடும்பத்தின் முதல் பொறியியல் பட்டதாரி ஆவார். திருச்செந்தூரில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்த அவர், குடும்பத்தை விட்டுப் பிரிந்து, மும்பை சென்றார். மாடலிங், நடிப்பு என பல திறமைகளைக் கொண்ட ஷானவி தனியாக நின்று சாதித்தும் காட்டினார்.
இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்தபோது, திருநங்கை என்பதால் அவருக்கு பணி மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் ஷானவி 2017 நவம்பரில் வழக்கு தொடர்ந்தார். பாலின பேதத்தால் ஏர் இந்தியா, தனக்கு பணி வழங்க மறுப்பதாக அதில் கூறியிருந்தார். இதுதொடர்பாக, ஏர் இந்தியா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் 4 வாரங்களில் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. 4 மாதங்கள் கடந்த பிறகும் இரு தரப்பும் பதில் அளிக்கவில்லை.
ஜனாதிபதிக்கு ஷானவி கோரிக்கை
முடிந்தவரை போராடியும் திறமை, அனுபவம் இருந்தும் தனக்கான பணி வழங்கப்படவே இல்லை என்பதால் மனம் உடைந்த ஷானவி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் தனக்கு வாழ வழி இல்லை என்பதால் தன்னை கருணை கொலை செய்துவிடும்படி ஷானவி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
உரிமைகள் பாதுகாக்க வேண்டும்
இதனையடுத்து ஷானவியின் பக்கம் மீடியாக்களின் பார்வை திரும்பியது. இந்நிலையில் ஷானவி பொன்னுச்சாமி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தமிழக பிரச்சனைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுப்பதைப் போல் திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய உரிமைகளை பாதுகாக்க அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக அரசு ஆதரவு வேண்டும்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷானவி கூறியதாவது : விவசாயிகள் பிரச்னை, மீனவர்களின் பிரச்னை வரும் போது மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதுகிறது. இதே போன்று தமிழச்சியான நங்கையர் சமுதாயத்தினருக்கு மத்திய அரசிடம் இருந்து பாகுபாடு வரும் போது தமிழக அரசின் ஆதரவு தேவை.
பணி வேண்டும்
எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேறு யாரும் இல்லை. இதை வலியுறுத்தி தான் நான் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன். திருநங்கைகளுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் தனக்கு பணி ஒதுக்க வேண்டும் என்றும் ஷானவி கேட்டுக் கொண்டுள்ளார்.