ஆசை ஆசையாக கட்டிக்கொண்ட தாலி .... உற்சாகத்தில் கூத்தாடும் திருநங்கைகள்! -வீடியோ
விழுப்புரம் கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் தாலிகட்டிக்கொண்டு, கும்மியடித்து தெய்வத்தை வழிபட்டனர். இதனால் விழுப்புரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.
விழுப்புரம்: விழுப்புரம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் வருடம் தோறும் நடக்கும் சித்திரை திருவிழாவில், திருநங்கைகள் தாலிக்கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
விழுப்புரம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ளது கூவாகம். இங்கு உள்ள கூத்தாண்டவர் கோயில் ஒவ்வொரு சித்திரை மாதம் திருவிழா நடைபெறும். சித்திரை 16ஆம் நாளன்று மகாபாரதப் போரில் அரவான் களப் பலியானதை நினைவுகூரும் விதமாக திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்வர். அது கோயிலில் பெரிய திருவிழாவாக நடைபெறும்.
இந்தத் திருவிழாவில் பங்கு கொள்வதற்காக மும்பை, கொல்கத்தா என இந்தியாவில் மட்டுமில்லாது வெளிநாடுகளில் வசிக்கும் திருநங்கைகள் கூட சந்தோஷத்துடன் கலந்துகொள்வர். இதனால் விழுப்புரமே விழா கோலம் பூண்டிருக்கும்.
நேற்று திருநங்கைகள் கூத்தாண்டவர் கோயிலில் தாலிக்கட்டிக்கொள்ளும் நிகழ்வு மிக விமரிசையாக நடைபெற்றது. அதன்பிறகு அவர்கள் கூட்டமாக சேர்ந்து பாட்டுப் பாடி கும்மியடித்து தெய்வத்தை வழிபட்டனர்.
தாலிகட்டுதல் விழாவுக்குப் பிறகு, தாலியை அறுத்து திருநங்கைகள் விதவை கோலம் பூணும் நிகழ்ச்சியும் நடைபெறும். தற்போது திருநங்கைகள் தங்களுக்குள் 'மிஸ் கூவாகம்' என்கிற அழகிப் போட்டியை நடத்தி பரிசுகளையும் வழங்கி வருகின்றனர்.