தாலி...வெள்ளைச் சேலை... உயிரை உருக்கும் ஒப்பாரி... திருநங்கைகள் திருவிழா - வீடியோ
விழுப்புரம் கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் தாலியை அறுத்துக்கொண்டு ஒப்பாரி வைத்து அழும் நிகழ்வு நேற்று நடந்தது.
விழுப்புரம்: விழுப்புரம் கூவாகம் கூத்தாண்டர் கோயிலில் தாலிகட்டிக்கொண்ட திருநங்கைகள் அவற்றை அறுத்து, வளையல்களை உடைத்து விதவைக் கோலம் பூண்டு ஒப்பாரி வைத்து அழும் நிகழ்வு நேற்று நடந்தது. அதில் ஏராளமான திருநங்கைகள் கலந்துகொண்டனர்.
விழுப்புரம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ளது கூவாகம். இங்கு உள்ள கூத்தாண்டவர் கோயில் ஒவ்வொரு சித்திரை மாதம் திருவிழா நடைபெறும். சித்திரை 16ஆம் நாளன்று மகாபாரதப் போரில் அரவான் களப் பலியானதை நினைவுகூரும் விதமாக திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்வர். அது கோயிலில் பெரிய திருவிழாவாக நடைபெறும்.
இந்தத் திருவிழாவில் பங்கு கொள்வதற்காக மும்பை, கொல்கத்தா என இந்தியாவில் மட்டுமில்லாது வெளிநாடுகளில் வசிக்கும் திருநங்கைகள் கூட சந்தோஷத்துடன் கலந்துகொள்வர். இதனால் விழுப்புரமே விழா கோலம் பூண்டிருக்கும்.
அவ்வாறு தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் தாலிகளை அறுத்து, வளையல்களை உடைத்து வெள்ளை சேலைக் கட்டிக்கொண்டு விதவை கோலம்பூண்டு, அரவான் களப்பலியானதை நினைத்து ஒன்று கூடி ஒப்பாரி வைத்து அழும் நிகழ்வு நேற்று நடந்தது.
இதில் பல ஆயிரம் திருநங்கைகள் கூட்டம் கூட்டமாகக் கூடி ஒப்பாரி வைத்து அழுதது மனதை உருக்குவதாக இருந்தது. இதில் பலர் தங்கள் சொந்த துயரை நினைத்து அழுது தீர்ப்பர். இனி மீண்டும் அடுத்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கு திருநங்கைகள் கூத்தாண்டவர் கோயிலில் கூடுவர்.