எங்களோட நிபந்தனைகளை ஏற்க என்னங்க தயக்கம்? எடப்பாடி கோஷ்டி மீது பாயும் செம்மலை!
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் விரைவில் நல்லாட்சி அமையும் என்று சேலம் தொகுதி எம்.எல்.ஏ. செம்மலை தெரிவித்துள்ளார்.
சேலம்: அதிமுகவின் இரு அணிகள் இணைவதில் தொண்டர்களுக்கு விருப்பமில்லை என்று தடாலடியாக பேசியுள்ளார் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை.
அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் அமைக்கப்பட்ட பேச்சு வார்த்தை குழு எப்போது கூடி பேசும் என்று பரபரப்புகள் நீடித்து வருகிறது. அதேநேரத்தில் நீடிக்கும் தாமதத்தால் இரு அணிகளும் இணையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதிமுகவின் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற இரு தரப்பிலும் பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்ய ஜுன் 16ம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் போது தொண்டர்களிடம் பெற்ற கையெழுத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளனர்.
எடப்பாடி கோஷ்டி கையெழுத்து
கட்சியின் பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவு இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறி வருகிறது. இதனால் முதல்வர் எடப்பாடி அணியும் சசிகலா, தினகரன் பதவிகளில் தொடர வேண்டும்; எடப்பாடி அரசு நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது.
செம்மலை எதிர்ப்பு
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை, எடப்பாடி அணியுடன் சேர தொண்டர்கள் விரும்பவில்லை; இந்த கருத்து ஓ.பன்னீர்செல்வத்திடம் எடுத்து வைக்கப்படும் என்றார்.
நிபந்தனைகள் என்னாச்சு
மேலும் சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும், ஜெயலலிதா மரணத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட செம்மலை, இதில் என்ன தயக்கம் எதிர் அணிக்கு என்றார். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் இருப்பதாக சப்பை கட்டு கட்டும் முதல்வர் பழனிசாமி நீதிவிசாரணைக்கு தயார் என்று சொல்லி ஒரு மனுவை தாக்கல் செய்தாலே பொதுநல வழக்கு முடித்து வைக்கப்பட்டு விடும், அதை ஏன் செய்யவில்லை என்றும் செம்மலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுவும் ஒரு காரணமாம்
முதல்வர் அணி மீதான செம்மலையின் கோபத்திற்கு மற்றொரு காரணம் சேலத்திலேயே இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்து பத்திரிக்கைகளை சந்தித்துள்ளார். ஆனால் சேலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான செம்மலைக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லையாம். என்னுடைய டிரைவருக்கு போன் செய்து மாவட்ட வளர்ச்சி பணி பற்றி சொன்னார்களே தவிர என்னை அழைக்க வில்லை என்றும் சாடினார் செம்மலை. தன்னை சேலத்திற்குள் விடக் கூடாது என்று போலீசாருக்கு முதல்வர் உத்தரவிட்டதாகவும், இந்த உத்தரவிற்கு அடிபணியாத டிஎஸ்பி இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் செம்மலை குற்றம்சாட்டினார். சேலத்தில் முதல்வர் இருக்கும் அதே வேளையில் தான் இபிஎஸ் அணி வேண்டாம், என்று செம்மலை கூறியுள்ளார். எனவே தொண்டர்களின் இந்த கருத்தை பிரதிபலிக்கும் செம்மலையின் பேட்டி இரண்டு கோஷ்டிகள் ஒருங்கிணைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.