தொழிற்சங்க பந்த்: தமிழகத்தில் பெரிய பாதிப்பில்லை... லாரிகள் மட்டும் ஓடவில்லை
சென்னை: மத்திய அரசு கொண்டு வரவுள்ள மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா - 2014ஐ எதிர்த்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இந்த வேலைநிறுத்தப்போராட்டத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. ஆட்டோக்கள், தனியார் பேருந்துகள் வழக்கம்போல இயங்கின. 3 லட்சம் லாரிகள் மட்டும் இயக்கப்படவில்லை.
சாலை விபத்துகளை குறைப்பதற்காக மோட்டார் வாகன சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்து அதற்கு ஒரு கமிட்டி அமைத்துள்ளது. இந்த கமிட்டி, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும் வகையில் முக்கிய அம்சங்களை கொண்ட வரைவு சட்டத்திருத்ததை உருவாக்கியுள்ளது. அதில் விதிகள், அபராதங்கள், கடுமையாக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
தண்டனை என்னென்ன
தண்டனை என்னென்ன ஹெல்மட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 500, இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டினால் ரூ. 10 ஆயிரம், செல்போன் பேசிக்கொண்டே ஓட்டினால் ரூ. 5000 அபராதம். தொடர்ந்து 3 முறை சிக்கினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வது போன்ற பரிந்துரைகள் இருப்பதாக கூறப்படுகிறது
கட்டணம் உயர்வு
மேலும் ஓட்டுனர் உரிமம், வாகனப்பதிவு போன்றவற்றிற்கான கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. மாநிலங்களில் உள்ள பொது போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க உள்ளதாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் சிக்கல்
இந்த சட்டம் அமலுக்கு வந்தால் ஓட்டுனர் உரிமம் பெறுவதில் சிக்கல் ஏற்படும், இலவச பஸ் பாஸ் மற்றும் கட்டண சலுகைகள், மாற்றுத் திறனாளிகள், சுதந்திர போராட்ட தியாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கான இலவச பயண சலுகைகள் ரத்தாகும். விசேஷ கால சிறப்பு பேருந்துகள் இயக்குவது மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு பறிபோய் விடும் என்று கூறி தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
வேலை நிறுத்தம்
எனவே இந்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த அகில இந்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. தமிழ்நாட்டில் இந்த வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் தி.மு.க. தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.
12 தொழிற்சங்கங்கள்
இன்றைய வேலை நிறுத்தப்போராட்டத்தில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பி.எம்.எஸ்., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., தொ.மு.ச, திராவிட தொழிற் சங்க பேரவை, எம்.எல்.எப்., விடுதலை தொழிலாளர் முன்னணி, பட்டாளி தொழிற் சங்கம் உள்ளிட்ட மத்திய, மாநில தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. அண்ணா தொழிற்சங்கத்தினர் இன்று வழக்கம் போல் பணிக்கு வந்தனர்.
சென்னையில் பாதிப்பு இல்லை
இதனால் சென்னையில் மாநகர பேருந்துகள் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இயக்கப்பட்டன. சாலைகளில் பெரும்பாலான பேருந்துகள் வழக்கம் போல் ஓடின. மற்ற தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மட்டும் இன்று வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் இன்று பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டதால் பேருந்து போக்குவரத்தில் பாதிப்பு இல்லை. அரசு விரைவு பஸ்களும் வழக்கம் போல் ஓடின.
ஆட்டோக்கள் நிறுத்தம்
இதே போல் சென்னையில் சிறிய சரக்கு வாகனங்களும், லாரிகளும், வேன்களும் ஓடின. பெரும்பாலான ஆட்டோக்களும் ஓடின. தொழிற்சங்கங்களில் உறுப்பினராக உள்ள ஆட்டோ டிரைவர்கள் மட்டும் ஆட்டோக்களை ஓட்டாமல் நிறுத்தி வைத்திருந்தனர்.
50 சதவிகித ஆட்டோக்கள்
சென்னை எழும்பூர், சென்ட்ரல், கோயம்பேடு, வடபழனி, அண்ணாநகர், அம்பத்தூர், அடையார், கிண்டி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை உள்பட பல பகுதிகளில் ஸ்டாண்டுகளில் ஆட்டோக்கள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சொந்த ஆட்டோ ஓட்டும் டிரைவர்கள், ஆட்டோ உரிமையாளர்களுக்கு தினசரி பணம் கட்டும் டிரைவர்கள் வேறு வழியின்றி ஆட்டோ ஓட்டுகிறார்கள். இந்த வகையில் 50 சதவீத ஆட்டோக்கள் சென்னையில் ஓடியது.
3.5 லட்சம் சரக்கு லாரிகள் நிறுத்தம்
சென்னையில் இருந்து வெளிமாநிலங்கள் செல்ல வேண்டிய சரக்கு லாரிகள் காலை 8 மணிக்கு பிறகு ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்குதான் லாரிகள் இயங்கும் என்று அறிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மூன்றரை லட்சம் லாரிகள் ஓடவில்லை என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி தெரிவித்தார். 7 ஆயிரம் டிரெய்லர் லாரிகளும் எல்.பி.ஜி. கேஸ் ஏற்றிச்செல்லும் 3 ஆயிரத்து 200 லாரிகளும், 70 ஆயிரம் மணல் லாரிகளும் ஓடவில்லை.
கோவை, திருப்பூரில்
கோவை, திருப்பூர், நீலகிரியில் பெரும்பாலான பஸ்கள் ஓடின. ஆட்டோக்கள் முழு அளவில் ஓடாமல் நிறுத்தப்பட்டது. இந்த 3 மாவட்டங்களிலும் 15 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடவில்லை. நீலகிரியில் உள்ள 150க்கும் மேற்பட்ட மினி பஸ்களும் சுற்றுலா வேன், கார்களும் ஓடாததால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
குமரி, நெல்லையில்
குமரி மாவட்டத்தில் பெரும்பாலான பஸ்கள் ஓடின. ஆட்டோக்கள், வேன்கள், தனியார் பேருந்துகள் ஓடாமல் நிறுத்தப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் சங்கரன் கோவில், தென்காசி, வள்ளியூர், நெல்லை ஆகிய இடங்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஊழியர்கள், அதிகாரிகள் இன்று ஒட்டு மொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால் அங்கு எந்த வேலையும் நடைபெறவில்லை. அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
கேரளாவிலும்
நெல்லை மாவட்டத்தில் இருந்து செங்கோட்டை அருகே புளியறை வழியாக கேரளாவுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் நிறுத்தப்பட்டன. கேரளாவில் வேலை நிறுத்தம் நடைபெறுவதால் அங்கிருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. தென் மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு லாரிகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.
புதுவையில் பந்த்
புதுவையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆட்டோக்களும், ஷேர் ஆட்டோக்களும் ஓடாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். புதுவையில் லாரிகளும் ஓடவில்லை.