குடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது... -தீவிரமடையும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் 6ம் நாளை எட்டியுள்ள நிலையில், குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நடத்திவரும் வேலைநிறுத்தம் 6-வது நாளை எட்டியுள்ள நிலையில், குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்றும், தமிழகம் முழுவதும் இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஊழியர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களை போலீசார் தாக்கி வருவதற்கு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.