போக்குவரத்து கழக நிதி முறைகேடு: எச்.ராஜா சகோதரர் உள்பட 21 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்!
போக்குவரத்து கழக நிதியை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் சகோதரர் சுந்தரம் உள்பட 21 பேர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
திருச்சி: போக்குவரத்து கழக நிதியை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் சகோதரர் சுந்தரம் உள்பட 21 பேர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
கடந்த 2006 முதல் 2011 வரை தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சராக தற்போதைய திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளாரும், திருச்சி மேற்கு தொகுதி சிட்டிங் எம்எல்ஏவமான கே.என். நேரு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வந்தார்.
இந்நிலையில் 2011 ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து போக்குவரத்து கழகங்களின் வருவாய் சுமார் 32.84 லட்சம் ரூபாயை கே.என். நேரு கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் ராஜி, ராஜேந்திரன், வெங்கடாசலம் உள்ளிட்ட 19 பேர் மீது தஞ்சையை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக தொழிலாளரும், அண்ணா தொழிற்சங்க (அப்போது இருந்த) மாவட்ட பொருளாருமான கோவிந்தராஜன் என்பவர் லஞ்சஒழிப்பு துறையில் கடந்த 2015 ம் ஆண்டு புகார் அளித்தார்.இப்புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
ஆயினும் விசாரணை முறையாக நடைபெறவில்லை எனக்கூறி கோவிந்தராஜன் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதியரசர் நாகமுத்து ஏ1 கே.என். நேரு உள்ளிட்ட 19 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் என உத்தரவிட்டார். வழக்கு விசாரணையின் போதே ராஜி என்பவர் இறந்துவிட்டார்.
இதனிடையே கோவிந்தராஜன் இவ்வழக்கில், அரசுபோக்குவரத்து கழக கும்பகோணம் மண்டலத்தில் தலைமை கணக்கு அதிகாரியாக இருந்துவந்த பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவின் உடன்பிறந்த இளைய சகோதரர் சுந்தரம், பொன்னுரங்கம், சுந்தரம், சிவக்குமார், அண்ணாத்துரை உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக லஞ்சஒழிப்புத்துறை சென்னை தலைமைக்கு அளித்த புகாரின் பேரில் இந்த 4 பேர் மீதும் லஞ்சஒழிப்புத்துறை 6 குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை லஞ்சஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு தனி நீதிமன்றத்தில் இன்று (9.2.2018) குற்றப்பத்திரிக்கை நகலை நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு சம்மன் அனுப்பி இருந்தது. இதனையடுத்து 21 பேரும் நீதிபதி சாந்தி முன்பு ஆஜராகி குற்றப்பத்திரிக்கை நகலை பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கே.என். நேருவை மீண்டும் ஏ1 ஆக இன்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக கோவிந்தராஜன் கூறியிருப்பது திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுந்தரம் பணியிலிருந்து ஓய்வு பெறும் முதல்நாளில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.