கடன் தொல்லை- போக்குவரத்துக் கழக மெக்கானிக் மகளைக் கொன்று தற்கொலை
சென்னை: சென்னையில் அரசுப் போக்குவரத்துக் கழக மெக்கானிக் ஒருவர் கடன் தொல்லையால் தனது மகளைக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவல்லிக்கேணியில் வசித்து வந்தவர் சுப்பிரமணி. 46 வயதான இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மெக்கானிக்காக இருந்து வந்தார். இவருக்கு சுஜாதா என்ற மனைவியும், ஷர்மிளா என்ற மகள், ஒரு மகன் உள்ளனர்.
16 வயதான ஷர்மிளா பிளஸ் ஒன் படித்து வந்தார். மகனுக்கு 10 வயதாகிறது. நேற்று தனது உறவினர் வீட்டுத் திருமணத்திற்குப் போவதற்காக மகனுடன் கிளம்பிப் போய் விட்டார் சுஜாதா. வீட்டில் சுப்பிரமணியும், மகளும் மட்டும் இருந்துள்ளனர்.
இரவு வீட்டுக்குத் திரும்பிய சுஜாதாவும், அவரது மகனும் சுப்பிரமணி தூக்கில் தொங்கியபடியும், ஷர்மிளா கழுத்து நெரிக்க்கப்பட்டும் பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினர்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். தெருவே பரபரப்பாகி விட்டது. காவல்துறையினருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். மரணத்திற்கு முன்பு சுப்பிரமணி ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், அதிக கடன் இருப்பதால் இரவில் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததாகவும், எனவே தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றதாகவும் கூறியுள்ளார். மேலும், எனக்குப் பின்னால், நான் ஆசையாய் வளர்த்த மகள் கஷ்டப்படக்கூடாது என்பதால் அவளையும் கொலை செய்து விட்டேன் என்றும் கடிதத்தில் எழுதி உள்ளார்.