போக்குவரத்து கழக புதிய பணியாளர்கள் உடனடியாக பணியில் சேர உத்தரவு
சென்னை: தொடர்ந்து வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக்கினைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தினால் தேர்வு செய்யப்பட்ட புதிய பணியாளர்கள் பணியில் சேர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர், உதவி-பொறியாளர், இளநிலை பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர்கள் என 6 வகையான பணிகளில் காலிபணியிடம் இருப்பது தெரியவந்தது.
அதன்படி 7 ஆயிரத்து 500 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மாதம் 2 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி 8 போக்குவரத்து கழகங்களிலும் 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அந்தந்த போக்குவரத்து கழகங்களில் விண்ணப்பதாரர்களுக்கு கல்வி, வயது, உடல் தகுதி, இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு நடந்தது. ஓட்டுனர்களை அந்தந்த போக்குவரத்து கழகங்களில் பஸ்களை ஓட்டி பார்த்தும், நடத்துனர்களை பஸ்களில் டிக்கெட் விநியோகம் செய்ய வைத்தும் தேர்வு நடத்தப்பட்டது.
தற்போது போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும்நிலையில், தேர்வு செய்யப்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் பணிநியமன ஆணைகளை வழங்கி, உடனடியாக போக்குவரத்து கழகங்களில் பணியில் சேர அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.