சென்னை, மதுரை, கோவையில் தொழிலாளர் நல அலுவலகங்கள் முற்றுகை- ஆயிரக்கணக்கான போக்குவரத்து ஊழியர்கள் கைது
7வது நாளாக போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடரும் நிலையில் மதுரையில் மறியலில் ஈடுபட்ட 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை : சென்னையில் தொழிலாளர் நல ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதே போன்று கோவையில் நடைபெறும் முற்றுகை போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினரும் பங்கேற்றுள்னர்.
2.57 காரணி ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 7வது நாளாக வேலைநிறுத்தம் நீடிக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் தொழிலாளர் நல ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முற்றுகையிட்டு போக்குவரத்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மழையையும் பொருட்படுத்தாமல் ஊழியர்கள் கையில் கொடியேந்தி அரசு தங்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என்று தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை பின்வாங்கப் போவதில்லை என்றும், தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான விஷயத்திற்காகவே போராடுவதாகவும் போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெறுகிறது, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இதில் பங்கேற்றுள்ளதால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இதே போன்று கோவையில் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்று வரும் போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினரும் பங்கேற்றுள்ளனர். பகல், இரவு பாராமல் உழைக்கும் போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கை என்பதால் அண்ணா தொழிற்சங்கத்தினரும் இதில் இணைந்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழிலாளர்கள் விரோத ஒப்பந்தத்தை நிறைவேற்றிய அரசின் ஒருதலைபட்சமான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழிலாளர் நல அலுவலகங்கள் முன்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மதுரையில் மறியலில் ஈடுபட்ட சுமார் 300 போக்குவரத்து தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.