பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் தோல்வி.. சொல்கிறார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தோல்வி அடைந்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13ஆவது ஓய்வூதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கள் தொழிலாளர்களுடன் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடன் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் 2.30 மணியளவில் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தோல்வி அடைந்துள்ளதாகவும், 75 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து 1000 பேருந்துகளை வரவழைத்து சிறப்பாக இயக்கப்படும். அதிக ரயில்களை இயக்க தென்னக ரெயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சங்கங்களுடன் நாளை நடைபெறும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது என்றார்.