போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.496 கோடி ஓய்வூதியம் ரெடி.. நாளை மறுநாள் கிடைக்கும்.. அமைச்சர் உறுதி
போக்குவரத்து ஊழியர்களுக்கு 496 கோடி ரூபாய் ஓய்வூதியம் நாளை மறுநாள் வங்கிக் கணக்கில் செலுத்த தயாராக உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை: சென்னை தியாகராயநகர் பேருந்து நிலையத்தில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று ஆய்வு செய்தார். போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பின்னர், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; செப்டம்பர் மாதம் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாகவும் அதன் பிறகு நிலுவையில் உள்ள தொகையினை அளிக்க படிப்படியான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது.
இதுகுறித்து முதல்வர் உறுதி அளித்தும் அவற்றை ஏற்காமல் 10 சங்கங்கள் வேலைநிறுத்தத்தை நடத்தி வருகின்றனர். அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 37 சங்கங்கள் அரசு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை.
தற்காலி ஓட்டுநர்கள்
இன்று 75 சதவீத பேருந்துகள் ஓடுகின்றன. மீதி இருக்கும் பேருந்துகளை ஓட்டுவதற்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம். ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளை நாடினால் தினக் கூலி அடிப்படையில் வேலை வழங்கப்படும்.
100 சதவீதம்
நாளை ஆட்களைத் தேர்வு செய்கின்ற போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நாளை 100 சதவீத பேருந்துகளை ஓடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கூடுதல் ரயில்கள்
பயணிகளுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க புறநகர் ரயில்களை அதிகம் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. தென்னக ரயில்வே 5 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க சம்மதித்துள்ளனர். மேலும், மெட்ரோ ரயில் பயணிகளை கவர 40 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம்
போக்குவரத்து கழக ஓய்வூதியம் நாளை மறுநாள் 496 கோடி ரூபாய் கணக்கில் வரவு வைக்க ஏற்பாடு செய்துள்ளோம். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று விஜயபாஸ்கர் கூறினார்.