‘ஓய்வூதியம் கேட்டால் கழுத்தை நெரித்து கொல்வேன்’- அதிகாரி கொலைவெறி தாக்குதல்.. காஞ்சியில் பரபரப்பு
ஓய்வூதியம் கேட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளரின் கழுத்தை நெரித்து காஞ்சிபுரம் பணிமனையின் துணை மேலாளர் கொலை வெறி தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் போக்குவரத்து பணிமனையில் 89 ஆயிரம் ரூபாய் ஓய்வூதிய பணத்தை கேட்கச் சென்ற ஓய்வு பெற்ற தொழிலாளரை கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவேன் என கூறி துணை மேலாளர் வெறித்தனமாக நடந்து கொண்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், அனைத்து பணிமனைகள் முன்பும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எப்., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மிரட்டல்
அந்த நேரம் பார்த்து, அங்கு வந்த ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர் தர்மராஜன் என்பவர், தனக்கு கிடைக்க வேண்டிய 89 ஆயிரம் ரூபாய் பணத்தை கேட்க பணிமனைக்குள் செல்ல முயன்றார். அப்போது அவரைத் தடுத்து நிறுத்திய துணை மேலாளர் தியாகராஜன், ஓய்வு பெற்ற உனக்கு இங்கென்ன வேலை என்று மிரட்டியுள்ளார்.
போராட்டம்
இதற்கு முதியவரான தர்மராஜன், தனக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டால் ஏன் இங்கே வரப் போகிறேன் என்று எதிர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தனக்கு கிடைக்க வேண்டிய பணத்தை தருமாறு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கோபமாக பேசியுள்ளார்.
கழுத்தை நெரித்து
தர்மராஜனின் எதிர்ப் பேச்சால் ஆத்திரமடைந்த தியாகராஜன், தர்மராஜனை பிடித்து இழுத்து அவரது கழுத்தை நெரித்து, ‘உன்னை கொலை செய்து விடுவேன்' என்று மிரட்டியுள்ளார். உடனே, அங்கிருந்த தொழிலாளர்கள் அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.
கண்டுகொள்ளாத போலீஸ்
இந்த சம்பவத்தின் போது பணிமனையில் நின்று கொண்டிருந்த போலீசார் ஒன்றும் பேசமாமல் அமைதியாக இருந்துள்ளனர். முதியவரை தாக்கிய சம்பவம் கண்முன்னே நடந்தும் கண்டுகொள்ளாத போலீசாருக்கு அங்கிருந்த பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
வைரல்
ஓய்வு பெற்ற ஊழியர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய அதிகாரி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தர்மராஜனின் கழுத்தை போக்குவரத்துத்துறை அதிகாரி தியாகராஜன் நெரிக்கும் படம் வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.