3வது நாளாக நீடிக்கும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்.. அத்தியாவசிய பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு
சென்னை: சுங்க சாவடிகளை அகற்றக் கோரி லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் 3வது நாளாக இன்றும் நீடிக்கிறது. இதனால் காய்கறிகள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளன.
இந்தியா முழுவதும் உள்ள 375 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நேற்று முன்தினம் தொடங்கினார்கள். அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அறிவித்துள்ள இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதனால், தமிழகத்தில் இருந்தும் வெளி மாநிலங்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் லாரிகளும் இயக்கப்படவில்லை.
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சரக்கு போக்குவரத்து முடங்கியுள்ளது. ஆனால் சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு திட்டவட்டமாக நிரகாரித்துள்ளது.
லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் 3 வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 7 லட்சம் லாரிகள் இயங்கவில்லை.
இந்த போராட்டம் காரணமாக காய்கறிகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு 20 விழுக்காடு லாரிகள் வரவில்லை. இதனால் சில குறிப்பிட்ட காய்கறிகள் விலை உயர்ந்து உள்ளது.