முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி.. இன்றே தொடங்கியது பஸ் ஸ்டிரைக்
போக்குவரத்து துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் நாளை திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றே அது தொடங்கியுள்ளது.
சென்னை: தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. ஆனால் இன்று பிற்பகலே ஸ்டிரைக் தொடங்கி விட்டது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.7000 நிலுவைத் தொகை பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் மே 15-ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக கடந்த 4-ஆம் தேதி அறிவித்தனர்.
தமிழக முதல்வருடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் ரூ. 750 கோடி நிலுவைத் தொகை வழங்க ஒப்புதல் அளித்தார். மேலும் சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் மேலும் ரூ.500 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த தொழிற்சங்கள் நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்தன. ஆனால் இன்று பிற்பகலுக்கு மேல் ஸ்டிரைக் தொடங்கி விட்டது. இதுகுறித்து அச்சங்கங்கள் கூறுகையில், பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்த நிலையில் அவற்றை ஏற்காததால் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும்.
இந்த அரசு ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் பணபலன்களை தரவில்லை. ரூ.7000 கோடி நிலுவைத் தொகை உள்ள நிலையில் வெறும் ரூ.1250 கோடி மட்டுமே வழங்க ஒப்புதல் அளித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. எனவே போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர் என்று தெரிவித்தனர். இதனால் போக்குவரத்து முடங்கி, தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.