போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்... தொழிற்சங்கங்கள் உறுதி!
ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேறும் வரை போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை : ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேறும் வரை போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும் என்று தொழிற்சங்கத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவு ஒருதலைபட்சமானது என்றும், அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் தொழிற்சங்கத்தினர் கூறியுள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு கேட்டு அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் நேற்று முதல் தமிழகம் முழுவதும் ஸ்டிரைக் நடக்கிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2.57 காரணி என்று ஊழியர்கள் விடாப்படியாக இருக்க, 2.44 காரணி மட்டுமே தர முடியும் என்று அரசு பிடிவாதமாக இருக்கிறது. மேலும் உடனடியாக பணிக்குத் திரும்பாவிட்டால் நீதிமன்ற உத்தரவுபடி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொழிற்சங்கத்தினர் ஆலோசனை
இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கத்தினர் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசினர் இந்த ஆலோசனைக்குப் பிறகு தொழிற்சங்கத் தலைவர் சண்முகம் மற்றும் சிஐடியூ தொழிற்சங்கத் தலைவர் சவுந்தரராஜன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
எம்எல்எக்களுக்கு ரூ. 1 லட்சம் சம்பளம்
அப்போது அவர்கள் கூறியதாவது : போக்குவரத்து ஊழியர்களின் கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பித்தது ஒருதலைபட்சமானது. எங்கள் தரப்பு நியாயங்களை திங்கட்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிப்போம். எம்எல்ஏக்களுக்கு ரூ. 1 லட்சம் சம்பளம் தர அரசுக்கு நிதி இருக்கும் போது, போக்குவரத்து ஊழியர்களின் ரூ. 7 ஆயிரம் கோடி பணத்தைத் தரத்தான் நிதி இல்லையா?
உரிமைகளுக்கான போராட்டம்
எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடரும். போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை இருக்கத் தான் செய்யும், அதற்காக எங்களின் உரிமைகளை விட்டு கொடுக்க முடியாது.
நாங்கள் காரணமல்ல
கடந்த 10 ஆண்டுகளாக தொழிலாளர் பணத்தைத் தராமல் இழுத்தடிக்கும் அரசுக்கு எதிராகத் தான் போராட்டம் நடத்தி வருகிறோம். மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கேள்வியை அரசை நோக்கி தான் கேட்க வேண்டுமே தவிர, ஊழியர்களை வேலைநிறுத்தத்திற்கு காரணம் சொல்லக் கூடாது என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.