ரூ.750 கோடி கொடுத்தாலும் போராட்டம் வாபஸ் இல்லை .. போராட்டம் தொடரும்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு 750 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்கினாலும் ஊதிய உயர்வுக்கான போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன.
Recommended Video
சென்னை: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு 750 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை என்று தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன.
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையில் ரூ.750 கோடி ரூபாய் பொங்கலுக்குள் உடனடியாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று அறிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்டு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். ஆனால், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் போராட்டம் தொடரும் என்று அறிவித்து உள்ளனர்.
1700 கோடிக்கு பதில் 750 கோடி
இதுகுறித்து தொ.மு.ச நிர்வாகிகள் கூறியதாவது, போக்குவரத்து ஊழியர்களுக்கு பிற துறையில் உள்ளவர்களுக்கு இணையாக சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மற்ற துறைகளில் 2.57 % ஊதிய உயர்வு வழங்கப்படும் நிலையில் எங்களுக்கு மட்டும் 2.44 % என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, கொடுக்க வேண்டிய அவர்களது பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்ததை நீதிமன்றம் கடுமையாக கண்டித்ததின் பேரில் ரூ.1,700 கோடி வழங்க வேண்டிய இடத்தில் வெறும் ரூ.750 கோடி மட்டும் வழங்குவதாக செய்தி வெளியாகி உள்ளது.
போராட்டம் தொடரும்
அதுவும் ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் இந்த தொகை வழங்கப்படுகிறது. இதனால் பணியில் இருப்பவர்களுக்கு எதுவும் கிடைப்போவதில்லை. இது அரசு மற்றும் அதன் அதிகாரத்தில் இருப்பவர்களின் அறியாமையே காட்டுகிறது. அதனால் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் கைவிடப்போவதில்லை தொடர்ந்து நடக்கும் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர். இவர்கள் மட்டுமன்றி மற்ற தொழிற்சங்கங்களும் இதே முடிவை எடுத்து உள்ளனர்.
நாங்கள் ஏற்க போவதில்லை
இதுகுறித்து சி.ஐ.டி.யு தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது, போராடி வரும் ஊழியர்களின் ஊதிய உயர்வு பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. முக்கியமாக அதை வலியுறுத்தி தான் இந்த போராட்டம் நடக்கிறது. ஊதிய மாற்று காரணி குறித்து எதுவும் கூறாமல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவை தொகையை அறிவித்து இருப்பது ஏமாற்று வேலையாகும். இதை நாங்கள் ஏற்கமாட்டோம் போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்து உள்ளனர்.
மற்ற கோரிக்கைகளை ஏற்க வேண்டும்
எச்.எம்.எஸ். தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், நிலுவை தொகை எப்படியும் எங்களுக்கு வர வேண்டியதுதான். அதை அரசு வைத்துக்கொள்ள முடியாது. அதில் எந்த பிரச்சனையும் இல்லை. 2003-ல் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி வழங்கப்படவில்லை. அதனையும் கொடுக்க வேண்டும். அதுவரையில் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்து உள்ளனர்.