சென்னை போக்குவரத்து ஊழியர்கள் போராட்ட எதிரொலி : குறைவான பேருந்துகள் இயக்கத்தால் மக்கள் அவதி
சென்னை போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் பிற மாவட்டங்களில் தொடர்வதால், ஊருக்கு செல்ல திட்டமிட்டிருந்த மக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
சென்னை : போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் சென்னையைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களும் பரவுவதால் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
போக்குவரத்துறை துறை ஊழியர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை, ஓய்வூதிய நிலுவைத்தொகை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அண்ணாசாலையில் உள்ள பல்லவன் இல்லம் அருகே காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதில் தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் இந்த போராட்ட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு வழங்க வேண்டும், 13-வது ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை நேற்று தொடங்கினர். இன்று மாலை வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த போராட்டத்தால் சென்னையின் பல பகுதிகளிலும் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
மாலையில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில், மாலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடப்பதால் போராட்டத்தை விடுத்து வேலைக்கு திரும்புவதாக அறிவித்தனர். இதனை ஏற்காத ஒரு பிரிவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதனால் போக்குவரத்து ஊழியர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது.
இந்த தகவல் காட்டுத்தீ போல மற்ற மாவட்டங்களுக்கும் பரவியதால் கடலூர்,விழுப்புரம் ,மதுரை , கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் போக்குவரத்து ஊழியர்கள் ஆங்காங்கே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். சாலைகளில் சென்ற பேருந்துகளில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டுள்ள சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து உள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்களின் இந்த போராட்டத்தால் வார இறுதி நாட்களில் சொந்த ஊருக்கு பயணிக்க திட்டமிட்டு இருந்த பயணிகள் செய்வதறியாது திகைத்து உள்ளனர். இந்த திடீர் சாலை மறியலால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.