சென்னையிலும் நில அதிர்வு: பீதியில் ஓடிய மக்கள்
சென்னை: சென்னையில் ஏற்பட்ட லேசான நிலஅதிர்வுக்கு மக்கள் பீதியுடன் வீடுகளை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது என புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பகல் 12,35 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 6.9-ஆகப் பதிவானது. பிஜி தீவு, ஜப்பான், சிலியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
அதே நேரத்தில் நேபாளத்தில் இன்று பிற்பகலில் 7.4 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது காட்மாண்டு நகரை கொண்டு ஏற்பட்டு உள்ளது என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளன. சேத விபரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
வட இந்தியாவில் நிலநடுக்கம்
இதனிடையே டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டு உள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
சென்னையில் நிலநடுக்கம்
இதன் தொடர்ச்சியாக சென்னையிலும் லேசான அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. நந்தனம், நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் கோடம்பாக்கம், சூளைமேடு ஆகிய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது. மயிலாப்பூரில் லேசான அதிர்வுகள் மட்டுமே உணரப்பட்டது.
வெளியேறிய மக்கள்
அடுக்குமாடிக் குடியிருப்புகள், உயரமான கட்டிடங்களில் இருந்தவர்கள் நில அதிர்வை உணர்ந்தவுடன் பீதியடைந்து வெளியே ஓடி வந்தனர். மயிலாப்பூரில் சில நிமிட பரபரப்புக்கு பிறகு, இயல்பு வாழ்க்கை திரும்பியது.
தொடரும் நிலநடுக்கம்
கடந்த 25-ஆம் தேதி நேபாளத்தை மையமாக கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் இந்தியாவிலும் பாதிப்பு ஏற்பட்டது. நிலநடுக்கத்திற்கு நேபாளம் நாட்டில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். வட இந்தியாவில் பீகார் மாநிலத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தொடர்ந்து நில அதிர்வுகள் உணரப்பட்டன. இந்நிலையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.