செங்கோட்டை- நியூ ஆரியங்காவு இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்
தமிழக -கேரள எல்லை நியூ ஆரியங்காவு இடையே சோதனை ரயில் ஓட்டம் தொடங்கியுள்ளது.
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து தமிழக -கேரள எல்லை நியூ ஆரியங்காவு இடையே அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் சோதனை ரயில் ஓட்டம் தொடங்கியுள்ளது. விரைவில் பயணிகள் போக்குவரத்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு 1903 ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டது. சென்னை, நாகப்பட்டினம், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் ரயில் போக்குவரத்து நடைப்பெற்று வந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு இந்த தடத்தில் மீட்டர் கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த மாதம் இறுதிக் கட்டத்தை நெருங்கியது. இந்த ஆண்டில் மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடித்து ஏப்ரல் மாதம் முதல் செங்கோட்டை புனலூர் வழியாக கொல்லத்திற்கு ரயில் சேவை தொடங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து நியூ ஆரியங்காவு முதல் செங்கோட்டை இடையே அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் தண்டவாளங்கள் உறுதித்தனமாய், பாதைகளின் தரம், தண்டவாளங்கள் பலம், சிக்னல் ,ரயில் நிலையம்,கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட அனைத்து பணிகளையும் 8 டிராலிகளில் அதிகாரிகள் குழுவினரோடு தென்னக ரயில்வேயின் பாதுகாப்பு ஆணையர் மனோகரன், கூடுதல் கோட்ட மேலாளர் முரளி கிருஷ்ணா ஆகியோர் தலைமையிலான குழுவினர் கடந்த 15ந் தேதி ஆய்வு நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து இன்று இறுதிக்கட்டமாக செங்கோட்டை முதல் நியூ ஆரியங்காவு வரையில் உள்ள 20.5 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த பாதையில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் செங்கோட்டையில் இருந்து பகவதிபுரம் வரை சோதனை ரயிலை அதிவேகத்தில் இயக்கி சோதனை செய்தார். பின்னர் பகவதிபுரத்தில் இருந்து 30கிலோ மிட்டர் வேகத்தில் மலைபாதையான நியூ ஆரியங்காவு வரை ரயிலை இயக்கி சோதனைகளை மேற்கொண்டார். இந்த சோதனையின் போது ரயில்வே உயர் அதிகாரிகள் குழுவினர் அவருடன் சோதனை ரயிலில் பயணம் செய்தனர்.