தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. பிரதமர் மோடி ஒரு துளி கண்ணீர்கூட வடிக்கவில்லை: பேராசிரியர் அருணன்
தூத்துக்குடி சம்பவத்துக்கு பிரதமர் மோடி வருத்தப்படவே இல்லை என அருணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்காக ஒருதுளி கூட பிரதமர் மோடி கண்ணீர் வடிக்கவில்லை என்று பேராசிரியர் அருணன் குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து கண்டன கூட்டமும் மதுரை மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது.
இதில் அச்சங்கத்தின் கௌரவ தலைவர் அருணன் கலந்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தின் அனைத்து துறவிகளும், சாமியார்களும், சித்தர்களும் அன்பே சிவம் என்று கூறி, அன்பைதான் முதன்மைப்படுத்திதான் இருக்கிறார்கள். அதேபோல குன்றக்குடி அடிகளாலும் பாலபிரஜாபதி அடிகளார் போன்றோரும் மதவெறியை எதிர்த்து அன்பை போதித்தார்கள். ஆனால் ஆர்எஸ்.எஸ் அமைப்பு மதவெறியை தூண்டிவிட்டு வருகிறது. இதனால் மற்ற மதங்கள் மீதும் பகைமையை ஏற்படுத்தும்படி செயல்பட்டு வருகிறது.
இனி ஆர்எஸ் எஸ் சாமியார்கள் இல்லாத தமிழகத்தையும், காவியற்ற தமிழகத்தையும் உருவாக்க வேண்டும். ஆர்எஸ்எஸ், பிற மத மக்களுக்கும், இந்துமத மக்களுக்கும் எதிரி. எச்.ராஜாவின் மூலம் காவி எவ்வளவு ஆபத்தானது என்பது தமிழக மக்களுக்கு புரிந்திருக்கும். மதுரையில் 8 ஆயிரம் சமணர்களை கொலை செய்ததை பெரியுபுராணம் பெருமையாக பாடியதால்தான் கம்யூனிஸ்ட் இயக்க தலைவர் சிங்காரவேலரும் தந்தை பெரியாரும் கடுமையாக போராடினார்கள்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நிலவளத்தை பாதுகாக்கவும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தையும் மதவெறியையும் நாம் எதிர்க்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்காக பிரதமர் மோடி ஒரு துளி கூட கண்ணீர் வடிக்கவில்லை. அத்துடன் அந்த நிகழ்வுக்கும் அவர் வருத்தப்படவில்லை. இந்த துப்பாக்கி சூடு குறித்து பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அருணன் பேசினார்.