அதிகாலையில் முடக்கப்பட்ட திருச்சி மாநாகராட்சி இணையதளம்.. "காஷ்மீர்" குறித்த தகவல் பதிவால் பரபரப்பு!
திருச்சி மாநகராட்சியின் இணையதளம் முடக்கப்பட்டு காஷ்மீர் பிரிவினைவாதம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி : பாகிஸ்தான் இணையதள முடக்கர்களால் திருச்சி மாநகராட்சியின் இணையதள பக்கம் இன்று அதிகாலையில் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் அரை மணி நேரத்திலேயே முடக்கம் சரிசெய்யப்பட்டது.
தமிழக இணையதளங்கள் முடக்கப்படுவது அண்மைக்கலாமாக தொடர்கதையாக இருந்து வருகிறது. உலகின் எந்த மூலையில் இருந்து வேண்டுமென்றாலும் ஒரு இணையதளத்தை முடக்கும் ஹேக்கிங் வேலைகள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் இந்நிலையில் திருச்சி மாநகராட்சியின் இணையதளம் இன்று அதிகாலை திடீரென முடக்கப்பட்டது.
www.trichycorporation.gov.in என்ற இணையதள பக்கத்தில் காஷ்மீர் பிரிவினைவாதம் தொடர்பான கருத்துகள் பதிவிடப்பட்டன. மேலும் குழந்தைகள், பெண்கள் மீதாக தாக்குதல்கள் குறித்தும் பதிவிடப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இந்த இணையதள முடக்கத்தை செய்தது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இணையதள முடக்கம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்தனர். இதனையடுத்து தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு அரை மணி நேரத்தில் இணையதள முடக்கம் சரி செய்யப்பட்டது. எனினும் இணையதள பக்கத்தில் இருந்து சில தரவுகள் திருடப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எனவே எந்த பகுதியில் இருந்து இந்த இணையதள முடக்கம் செய்யப்பட்டது என்ற விசாரணையின் முடிவிலேயே இதன் நோக்கம் தெரிய வரும்.
இந்த சதிச்செயலில் ஈடுபட்டவர்களின் விவரத்தை திரட்டும் பணியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.