உங்க கூட மழையில நனைந்தோம்.. வெயில்ல காய்ந்தோம்.. ஆகவே கலைந்து செல்லுங்கள்.. கெஞ்சிய போலீஸ் அதிகாரி
உங்க கூட மழையில நனைந்தோம்.. வெயில்ல காய்ந்தோம்.. ஆகவே மாணவர்களே கலைந்து செல்லுங்கள் என்று திருச்சி மாவட்ட துணை ஆணையர் மயில்வாகனம் மாணவர்களிடம் கெஞ்சிய வீடியோ இதோ…
திருச்சி: ஜல்லிக்கட்டு ஆதரவான போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர மாணவர்களிடம் திருச்சி மாவட்ட துணை ஆணையர் மயில் வாகனம் அதிகாரம் குறையாமல் அதே நேரத்தில் போராட்டத்தை முடித்து கொள்ள பேசும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
இவ்ளோ நேரம் நீங்க பேசினீங்கல்ல.. இப்போ நான் பேசறேன்.. போராட்ட மாணவர்களைப் பார்த்து இப்படி ஆரம்பிச்சார் துணை ஆணையர் மயில் வாகனம்.
பின்னர், "போலீசுடம் அதே நட்புடன் இருக்கலாம் என்று நினைப்பவர்கள் கலைந்து போகலாம். அப்படி இல்லை என்பவர்கள் இங்கே இருக்கலாம் தம்பிகளா.. இந்த மாணவர் போராட்டம் எப்படி வெற்றி பெற்று வரலாற்றில் பதிந்ததோ, அதே போல திருச்சியில் அசம்பாவிதம் ஏற்பட்டால் அந்த கறைகளுக்கும், கசப்பான அனுபவத்திற்கும் மிக மோசமான வரலாற்று பதிவுகளுக்கும் நீங்கள் காரணமாக இருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன்.
உங்கள் மீது அன்பும் அக்கறையும் இருப்பதால் இதைச் சொல்கிறேன். இந்த மாணவர்கள் போராட்டத்தில் சில அமைப்புகள் தவறாக வழி நடத்துவதாக கேள்விப்பட்டுத்தான் வந்து வந்து பேசிக் கொண்டிருக்கிறோம். மறுபடி மறுபடியும் வந்து பேசிக் கொண்டிருக்கிறேன் நான் என்றால் அதற்கு காரணம் நீங்கள் எல்லாம் சிறியவர்கள். ஆனால் பெரிய பாடத்தை சொல்லிக் கொடுத்துள்ளீர்கள். அதனை நான் வரவேற்கிறேன்.
அதே நேரத்தில் உங்களுடைய அனுபவம் என்பது எங்களை விட கம்மி. அதிகாரி என்ற முறையிலும் உங்கள் வயதை கடந்து வந்தவன் என்ற அடிப்படையிலும் உங்களுக்கு அட்வைஸ் பண்ற தகுதியும் அனுபவமும் எனக்கு இருக்கிறது. சில இடங்களில் மாணவர்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள பார்த்தார்கள். திருச்சியிலும் இதே போல நடக்க சதி நடந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் நான் மறுபடியும் மறுபடியும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த 6 நாட்களாக நான் அப்படி உங்களிடம் பேசவில்லை. நீங்க என்ன கேட்டிங்களோ அதனை நாங்கள் செய்து கொடுத்தோம். நீங்க மழையில் நனைந்த போது நாங்களும் நனைந்தோம். நீங்க வெயில்ல காய்ந்த போது நாங்களும் காய்ந்தோம். ஆனால், நீங்க சாப்பிட்ட அளவிற்கு நாங்கள் சாப்பிடவில்லை. அந்த அளவிற்கு உங்களோடு நின்று களமாடினோம்.
அந்த விசுவாசமும், அந்த உணர்வோம், காவல்துறை மீது மரியாதை இருந்தால் மாணவர்கள் கலைந்து போகலாம். இது மேல எதுவும் நான் சொல்றதுக்கு இல்ல. நன்றி." என்று பேசிவிட்டு விறுட்டென்று அங்கிருந்து புறப்பட்டார்.
இதைவிட மோசமாக சென்னையில் போலீஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் கெஞ்சிப் பேசினார். அதனால் என்ன பயன்? எத்தனைப் பேர் மண்டை உடைந்தது எத்தனை வீடுகள், வாகனங்கள் போலீசாராலேயே கொளுத்தப்பட்டன என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு வந்து கொண்டு தானே இருக்கிறது.