முக்கொம்புவில் உடைந்த பாலம் விரைவில் சரி செய்யப்படும்: திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்
முக்கொம்புவில் உடைந்த பாலம் விரைவில் சரி செய்யப்படும் என்று திருச்சி ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருச்சி: முக்கொம்பு அணையில் உடைந்த பாலம், மதகுகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கவுள்ளன. இந்த பணிகள் ஒருவார காலத்திற்குள் முடிக்கப்படும். இதற்காக ராட்சத எந்திரங்கள், தொழில்நுட்ப குழுவினர்கள் வரவழைக்கப்படுகின்றனர் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.
திருச்சி முக்கொம்பில் உள்ள பாலம் இடிந்து விழுந்த பகுதியை கலெக்டர் ராசாமணி இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"திருச்சி முக்கொம்பில் காவிரி, கொள்ளிடம் பிரியும் பகுதியில் கொள்ளிடத்தில் உள்ள 6 முதல் 13 வரையிலான தூண்கள் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அணையின் 9 மதகுகள் பழுது ஏற்பட்டுள்ளது.
முக்கொம்பை பொறுத்த வரை காவிரியில் 41 மதகுகளும், கொள்ளிடத்தில் இரு பிரிவாக 45 ஷட்டர்களும் உள்ளன. அவற்றில் 10 ஷட்டர்கள் உறுதியாக உள்ளது. மற்ற சட்டர்களின் ஸ்திர தன்மை பொதுப்பணித்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட உள்ளது" என்று கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், "நேற்று இரவு நிலவரப்படி காவிரியில் 32 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் 8 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. மாயனூர் அணையிலிருந்து இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதனால், இன்று காலை நிலவரப்படி காவிரியில் 50 ஆயிரம் கன அடி தண்ணீரும் கொள்ளிடத்தில் 23 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இருப்பினும், மதியத்திற்கு பிறகு முக்கொம்பிற்கு வரும் நீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது.
முக்கொம்பில், கொள்ளிடம் அணை உடைந்துள்ளதால் வெள்ள பாதிப்புகளோ, விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாத நிலையோ ஏற்படாது. திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான நீர் காவிரி வழியாக தொடர்ந்து திறந்து விடப்படுகிறது. இதனால் விவசாயத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
கொள்ளிடத்தை பொறுத்தவரை ஆற்றில் கூடுதலாக வரும் உபரி நீர் மட்டுமே திறந்து விட பயன்படுத்தப்படும். தற்போது அணை இடிந்ததை தொடர்ந்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் கொள்ளிடம் பாலத்தின் ஸ்திரதன்மை குறித்து ஆய்வு செய்யப்படும்.
கொள்ளிடத்தில் அணை மதகுகள் உடைந்த பகுதியில் இன்று மாலை முதல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் ஒருவார காலத்திற்குள் முடிக்கப்படும். இதற்காக ராட்சத எந்திரங்கள், தொழில்நுட்ப குழுவினர்கள் வரவழைக்கப்படுகின்றனர்." என்று தெரிவித்தார்.