தமிழகம் முழுவதும் வெயிலின் கோரத்தாண்டவம் அதிகரிப்பு: வேலூர் 111 டிகிரி சுட்டெரித்தது.
சென்னை: தமிழகத்தில் வெயிலின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலையிலேயே வெயில் மண்டையை பிளக்கிறது. 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயில் 105 டிகிரியை தாண்டியது. காலை நேரத்தில் திருச்சியில் 110 டிகிரிவரை சுட்டெரித்த வெயில் மாலையில் சற்றே குறைந்தது. அதே நேரத்தில் வேலூரில் அதிகபட்சமாக 111 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
திருச்சி, கரூர், மதுரை தருமபுரி, பரமத்திவேலூர் பகுதிகளில் 108 டிகிரி வெப்பமும், சேலம் 107 டிகிரி, பாளையங்கோட்டை 105 டிகிரியும் பதிவாகியுள்ளது. நாகப்பட்டினம் , பரங்கிப்பேட்டை பகுதிகளில் 102 டிகிரியும், சென்னை கோவை திருப்பூர் பகுதிகளில் 101 வெப்பமும் பதிவாகியுள்ளது.
வெயில் கொடுமையால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வெயிலின் உச்சகட்டம் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி தொடங்க உள்ளது. இந்த காலகட்டத்தில்தான் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்.
தமிழகத்தில் வேலூர், சேலம், கரூர், தர்மபுரி, மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 15 நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை மக்கள் தவிர்த்து வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில் சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகள் மதியம் வேளையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. பல இடங்களில் புதிதாக போடப்பட்ட தார்சாலைகள் உருகும் அளவுக்கு வெயில் கொளுத்துகிறது.
இந்தநிலையில், மேலும் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காலை 8 மணி முதலே வெயில் வாட்டியது. வெளியே தலைக்காட்ட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்தது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட காற்று வீச வாய்ப்புள்ளது. அதன் காரணமாக 3.6 டிகிரி முதல் 5.4 டிகிரி வரை கூடுதலாக வெயில் பதிவாக வாய்ப்புள்ளது. எனவே, இந்த நேரங்களில் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இன்றைய வெப்பநிலை ( பாரன்ஹீட்)
சென்னை: 101
மதுரை: 108
திருச்சி : 108
கோவை : 101
திருப்பூர் : 101
ஈரோடு : 104
கரூர் : 108
சேலம் : 107
வேலூர் : 111
பரமத்தி வேலூர் - 108
தருமபுரி : 108
நாகப்பட்டினம் -102
திண்டுக்கல் : 103
விருதுநகர் :105
திருநெல்வேலி: 105
கன்னியாகுமாரி : 94
கொடைக்கானல் : 73
உதகமண்டலம் : 78
நூற்றாண்டுகளில் இல்லாத வெயில் பதிவு
திருச்சி நகரில் கடந்த ஒருவார காலமாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதற்கு முன், 1896 ஏப்ரல் 19ம் தேதி அதிகபட்சமாக,109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதன்பின் நேற்று, அதே அளவு வெப்பம் பதிவானது. இந்த நுாற்றாண்டில், ஏப்ரல் மாதத்தில் பதிவான உச்சபட்ச வெப்ப நிலை பதிவு இதுவாகும்.
வேலுாரில், 16 ஆண்டுகளுக்கு பின், நேற்று 108 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி உள்ளது. இதற்கு முன், 2000ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி 112 டிகிரி பாரன்ஹீட் பதிவானது சென்னையில், 10 ஆண்டுகளுக்கு பின், ஏப்ரலில் 106 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. இதற்கு முன், 2006 ஏப்ரல் 30ல், 107 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.
மதுரையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில், அதிகபட்சமாக, 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவியது. இதற்கு முன், 2013 ஏப்ரல் 8ல், 107 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.