அறிவியல் வளர்ந்தாலும் உலக்கை மூலம் கிரகணங்கள் தொடங்குவதையும், முடிவதையும் அறியும் திருச்சி மக்கள்
அறிவியல் வளர்ந்தாலும் உலக்கை மூலம் கிரகணங்கள் தொடங்குவதையும், முடிவதையும் அறியும் திருச்சி மக்கள்
திருச்சி: அறிவியல் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் போதிலும் கிரகணத்தின்போது திருச்சி கிருஷ்ணாபுரத்தில் தாம்பால தட்டில் உலக்கையை நிற்க வைத்தால் எந்த பிடிப்புமின்றி நிற்பதும், முடிவடைந்ததும் தானாக கீழே விழுவதும் நடைபெறுகிறது.
152 ஆண்டுகளுக்கு பிறகு மூன்று அரிய நிகழ்வுகளுடன் இன்று அபூர்வ சந்திர கிரகணம் தோன்றியுள்ளது. இதனை வெறும் கண்களாலேயே மக்கள் காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சந்திர கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்திர கிரகணத்தை காண ஏராளமான மக்கள் அங்கு குவிந்துள்ளனர்.
இந்தியாவில் இந்த அபூர்வ சந்திர கிரகணம் மாலை 5.18 மணி முதல் 6.21 மணி வரை இந்த சந்திர கிரகணம் நடைபெறும். இதை பார்ப்பதற்கு சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த காலங்களில் அறிவியல் வளர்ச்சி பெறாத போது தாம்பால தட்டில் உலக்கையையோ அல்லது கடப்பாரையையோ நிற்க வைத்தால் எந்த பிடிப்பும் இல்லாமல் நின்றால் கிரகணம் தொடங்கிவிட்டதாகவும், கீழே சாய்ந்துவிட்டதால் கிரகணம் முடிந்து விட்டதாகவும் மக்கள் கணித்து வந்தனர். தற்போது அறிவியல் என்னதான் வளர்ச்சி பெற்றிருக்கும் போதிலும் திருச்சி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட முறையையே பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த காலத்தில் பயன்படுத்தி வந்த இந்த முறையை இந்த காலத்துக்கு மக்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக கிருஷ்ணாபுரத்தில் இதுபோன்ற முறையை ஊர்மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த முறை சூரிய கிரகணத்துக்கும் பொருந்துமாம்.