சூரிய மின்சக்தி திட்டத்திற்கு அனுமதி பெற லஞ்சம்… நத்தம் விஸ்வநாதன் மீது திருச்சி போலீசார் வழக்கு
சூரிய மின்சக்தி திட்டத்திற்கு அனுமதி பெற்றுத்தர 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி: முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்பட 4 பேர் மீது திருச்சி கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருச்சி காஜாமலையைச் சேர்ந்தவர் லோகநாதன். கடந்த 2014ஆம் ஆண்டு சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க அனுமதிகேட்டு, அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை அனுகியதாக கூறப்படுகிறது. திட்டத்திற்கு அனுமதி அளிப்பதற்கு ரூ50 லட்சத்தை நத்தம் விஸ்வநாதன் லஞ்சம் கேட்டதாக லோகநாதன் கூறியுள்ளார்.
இதையடுத்து ரூபாய் 50 லட்சத்தை விஸ்வாதனிடன் கொடுத்ததாகவும், ஆனால் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கான அனுமதியை பெற்றுத் தராமல், அவர் மோசடி செய்ததாக லோகநாதன் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, மோசடி தொடர்பாக நத்தம் விஸ்நாதன், பாஸ்கர், அருண்குமார், காமராஜ் ஆகிய 4 பேர் மீது, கூட்டுச்சதி, மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த திருச்சி கே.கே.நகர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்