"தலைவன் ஸ்டாலின்" வந்துவிட்டார்.. இனி வெற்றிடம் என்ற வெற்று சொல் இல்லை... திருச்சி சிவா
சென்னை: திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் இனி வெற்றிடம் இல்லை என திருச்சி சிவா தெரிவித்தார்.
கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் ஸ்டாலின். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று பொதுக்குழுவில் வெளியானது.
முன்னதாக பொதுக் குழுவில் கருணாநிதி, வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி சிவா எம்பி கூறுகையில் உணர்ச்சி பெருக்கோடு நாம் அனைவரும் ஒன்று கூடியுள்ளோம். கவலையை மறப்போம், கண்ணீரை துடைப்போம், கடமையை தொடருவோம் என்று அண்ணா கூறுவார்.
கழகத்தின் தலைவர் ஸ்டாலின் என்று சொல்லும் போது ஒரு புளகாங்கிதம், ஒரு பரவசம், ஒரு மகிழ்ச்சி. ஸ்டாலின் இந்த உயர்வை ஒரே நாள் இரவிலே அவர் எட்டிவிடவில்லை. பொதுவாக நிதானமாக வளர்ச்சி அடைந்தவர்களை ஏணியின் மூலம் வந்தார்கள் என்பார்கள்.
அவர் ஏணியிலேதான் வந்தார். ஆனால் அது மரயேணி அல்ல நூலேணி. இந்த ஏணியில் ஏறுவது எவ்வளவு சிரமம். சூறாவளிகளையும், புயல்களையும் சந்தித்த கடந்த கால அனுபவம் அவருக்கு உண்டு. தமிழகத்தில் வெற்றிடம் என்ற வெற்றுச் சொல்லுக்கு இனிமேல் இடமில்லை என்பதை இன்றைய இந்த பொதுக்குழு நிலைநிறுத்துகிறது என்றார் அவர்.