அனிதா மரணத்திற்கு மத்திய பாஜக அரசு தான் முதல் குற்றவாளி - திருச்சி சிவா
நீட் தேர்வு என்பது அயோக்கியத்தனமானது என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
அரியலூர் : அனிதாவின் மரணத்திற்கு மத்திய பாஜக அரசு தான் முதல் குற்றவாளி என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் என்ற கிராமத்தில் பிறந்த அனிதாவின் கனவு மருத்துவர் ஆக வேண்டும் என்பதே. உச்சநீதிமன்றம் வரை சென்று நீட் தேர்வுக்கு எதிராக போராடினார். அவரின் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கவுன்சிலிங் நடைபெற்றது. மருத்துவம் படிக்க முடியவில்லையே என்று மனமுடைந்த மாணவி அனிதா தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அனிதாவின் தற்கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
அனிதாவின் உடலுக்கு பல அரசியல் கட்சித்தலைவர்களும், பொதுமக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாணவி அனிதா உடலுக்கு அஞ்சலி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அஞ்சலி செலுத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மார்ச் மாதம் முதலே நீட் தேர்வுக்கு விலக்கு கோரி திமுக குரல் கொடுத்தது என்றார். தமிழகத்தில் அப்போது ஆளும் கட்சியினர் பதவிக்காக சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். தேர்வுகள் முடிந்த பின்னரே ஆளும் கட்சியினர் சுதாரித்தனர் என்றார்.
நீட் தேர்வு விலக்கு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய சிவா, நீட் தேர்வு என்பது அயோக்கியத்தனமானது என்றார். 1976 மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவ கனவு சிதைந்து போனதால் மரணமடைந்து விட்டார் அனிதா. மாணவர்கள் தோல்விக்கு எதிராக போராட வேண்டும். தோல்வியை தோல்வியடையச் செய்திருக்க வேண்டும் என்று கூறினார்.