திருச்சி அருகே பள்ளியில் ராகிங் கொடுமை.. சக மாணவர்களால் அடி, உதை.. 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை
திருச்சியில் ராகிங் கொடுமையால் 10வகுப்பு மாணவன் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி: திருச்சி மாவட்டம் நெருஞ்சலக்குடி ஊராட்சியை சேர்ந்த 10வகுப்பு மாணவர் ரஞ்சித் என்பவர் சக மாணவர்களின் ராகிங் கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
மாணவர் ரஞ்சித் திருச்சியில் இருக்கும் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக ரஞ்சித்தை சக மாணவர்கள் தாக்கியதில் அவருடைய கை உடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளியில் புகார் அளிக்கப்பட்டத்தை அடுத்து இனி இது போன்ற சம்பவம் நடக்காது என்று ஆசிரியர்கள் உறுதி அளித்துள்ளனர்.
இதையடுத்து படிப்பை தொடர்ந்து வந்த ரஞ்சித்தை மீண்டும் சக மாணவர்கள் ராகிங் செய்து அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் வலிதாங்காமல் தவித்து வந்த மாணவன் ரஞ்சித் வீட்டிலும் சொல்ல முடியாமல், சக மாணவர்களை எதிர்த்தும் நிற்கமுடியாமல் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
சக மாணவர்கள் ரஞ்சித்தை தினமும் தாக்கியது குறித்து ரஞ்சித் ஒரு கடிதத்தில் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மாணவனின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் ரஞ்சித் தற்கொலைக்கு காரணமான மாணவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அதுவரை உடலை பெற போவதில்லை என்றும் ரஞ்சித்தின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.