80 வயது பாட்டியைக் கொன்ற இளம் பெண்.. கல்யாணமான 4வது நாளில் ஆயுள் தண்டனை!
திருமணமான நான்காவது நாளில் புதுப்பெண்ணுக்கு திருச்சி மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
Recommended Video
திருச்சி: திருமணமான நான்காவது நாளில் புதுப்பெண்ணுக்கு திருச்சி மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கோட்டை பகுதி பட்டவர்த் ரோட்டை சேர்ந்த 80 வயதான முத்துரத்தினாவதி கடந்த 2015ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் முத்துரத்தினாவதி கொலை செய்யப்பட்டார்.
அவரை நகைக்காக மர்மநபர்கள் கம்பியால் குத்தி கொலை செய்ததாக அவரது வீட்டில் மாடியில் வாடகைக்கு தங்கியிருந்த திவ்ய பிரியா என்ற பெண் கூறினார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
திவ்யபிரியாவின் மீது சந்தேகம்
இதில் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்கள் யாரும் அவரது வீட்டிற்கு வந்த போன்ற காட்சிகள் இல்லை. மேலும் திவ்ய பாரதி கூறியது போன்ற சம்பவம் நடக்கவில்லை என்றும் போலீசார் கண்டுபிடித்தனர்.இதையடுத்து அன்று வீட்டில் இருந்த திவ்யபிரியாவின் பக்கம் போலீசாரின் சந்தேகம் திரும்பியது. அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
உடற்பயிற்சி ஆசிரியை
இதில் தனியார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியையான திவ்ய பிரியா தனது தாயருடன்முத்துரத்தினாவதி வீட்டின் மாடியில் வசித்து வந்துள்ளார். அப்போது வீட்டை பராமரிப்பது தொடர்பாக முத்துரத்தினாவதிக்கும் திவ்யபிரியாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கம்பியால் குத்திய திவ்யபிரியா
இந்நிலையில் சம்பவம் நடந்த 2.2.2015ஆம் ஆண்டு முத்துரத்தினாவதி வீட்டில் யாரும் இல்லாததால் மாடிக்கு சென்றுள்ளார். அப்போது போனில் பேசிக்கொண்டிருந்த திவ்யபிரியாவை கண்டித்த அவர் இதுகுறித்து அவரது தாயாரிடம் சொல்லப்போவதாக கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த திவ்யபிரியா முத்து ரத்தினாவதியை கீழே தள்ளி கம்பியால் குத்தியுள்ளார்.
கொலையாளியை பிடித்த போலீசார்
இதில் முத்து ரத்தினாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இதனால் அச்சமடைந்த திவ்ய பிரியா முத்து ரத்தினாவதியின் நகைகளை கழட்டி அருகில் இருந்த சாக்கடையில் வீசியுள்ளார்.மேலும் கொள்ளையர்கள் முத்து ரத்தினாவதியை கொன்றுவிட்டு அவரது நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக நாடகமாடியுள்ளார்.திவ்யபிரியாதான் கொரலை செய்தார் என்பதை உறுதி செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட திவ்யபிரியாவுக்கு அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்ததற்காக 10 வருடம் சிறைத்தண்டனை, ரூ.1000 அபராதம், கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை, ரூ.1000 அபராதம், நகைகளை கொள்ளையடித்ததற்காக 7 வருடம் சிறைத்தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்தும், தண்டனைகளை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஜெசிந்தா மார்ட்டீன் தீர்ப்பு கூறினார்.
திருமணமான 4வது நாளில்
இதனை தொடர்ந்து திவ்யபிரியா திருச்சி மகளிர் தனி சிறையில் அடைக்கப்பட்டார். திவ்யபிரியாவுக்கு 3 நாட்களுக்கு முன்பு தான் காதல் திருமணம் நடந்து உள்ளது. நான்காவது நாளில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.