சங்கரலிங்கம் செய்த ஒரே குற்றம்.. தவறு செய்த போலீஸை கண்டித்து பேசியது.. அதற்காக இப்படியா??
தமிழக போலீசாரை அவமரியாதையாக பேசிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
திருச்சி: காலால் எட்டி உதைத்து அதனால் உயிரிழந்த திருச்சி உஷாவை கூட அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீசார் மறந்துவிட்டார்கள். ஆனால் தங்கள் தவறினை சுட்டிக் காட்டி பேசி வீடியோ வெளியிட்ட ஒரு நபரை, இதே வேலையாக இருந்து இவ்வளவு காலம் காத்திருந்து தற்போது கைது செய்துள்ளனர்.
அதற்காக போலீஸார் எடுத்துக் கொண்ட முயற்சி இருக்கிறதே... தொடர்ந்து படிங்க.
திருச்சியில் கர்ப்பிணி உஷா பைக்கில் செல்லும்போது காமராஜ் என்னும் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததும், அதில் உஷா உயிரிழந்ததும் தெரிந்த விஷயம்தான். அதற்காக ஆத்திரமடைடந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நடத்திய சாலைமறியலும், அதற்காக காமராஜை கடுமையாக எதிர்த்ததும் நாடறிந்த சங்கதிதான்.
இணையத்தில் வீடியோ
ஆனால் திருச்சி காவல்துறை இது எல்லாவற்றையும் விட்டு விட்டது. மாறாக, ஒரே ஒரு நபரை பற்றி மட்டுமே சிந்தித்தது. உஷா இறந்தபோது, தமிழக காவல்துறையினரை குறிப்பாக காமராஜையும் கடுமையாக, தகாத வார்த்தைகளில் பேசி விமர்சனம் செய்து கண்டித்து சங்கரலிங்கம் என்பவர் ஒரு வீடியோவை சமூக இணையதளத்தில் வெளியிட்டார். அவருக்குத்தான் குறி வைத்தது.
பேஸ்புக்கில் ஆய்வு
முதல் நடவடிக்கையாக 21.3.2018 அன்று திருச்சி திருவெறும்பூர் ஸ்டேஷனில் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. அடுத்ததாக கைது நடவடிக்கை. சங்கரலிங்கம் யார்? எங்கிருக்கிறார் என்ற தகவலைத் தேடியது. எங்கேயும் கிடைக்கவில்லை. கடைசியில் பேஸ்புக்கில் ஆய்வு செய்தனர். முகவரி கிடைத்தது. அது சிவகங்கை மாவட்டத்திலுள்ள நெடுங்குளம் என்ற தகவல் தெரிந்தது. அங்கு விரைந்தனர் போலீசார்.
குவைத் அரசுக்கு கோரிக்கை
ஆனால் சங்கரலிங்கம், வீட்டில் இல்லை, அதாவது நாட்டிலேயே இல்லை. குவைத்தில் வேலை செய்கிறார் என்றனர் குடும்பத்தினர். மனம் ஆறவில்லை போலீசாருக்கு. குவைத்திலிருந்து மத்திய உள்துறை செயலகத்திற்கு வெளியுறவு அமைச்சகம் மூலம் ஒரு கோரிக்கை வைத்தனர். குவைத்தில் வேலை செய்யும் சங்கலிங்கத்தை இந்தியா கொண்டு வரவேண்டும் என்று கேட்டு கொண்டது போலீஸ். இந்த கோரிக்கையை இந்திய தூதரகம் குவைத் அரசுக்கு அனுப்பி வைத்தது.
கைது செய்தது
அதனை ஏற்ற குவைத் அரசும் சங்கரலிங்கத்தை இந்தியா அனுப்பியது. இந்தியா திரும்பிய சங்கரலிங்கம் விமானம் மூலம் திருச்சி வந்தார். அவ்வளவுதான். பலநாள் காத்து கிடந்தவர்கள், விமான நிலையத்திலேயே கடந்த 30-ம் தேதி கைது செய்து பெருமூச்சு விட்டது போலீஸ். சங்கரலிங்கம் செய்தது தவறுதான். காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசியிருக்க கூடாது. ஒரு காவலர் செய்த குற்றத்துக்கு ஒட்டுமொத்த காவல்துறையும் கடுமையாக பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அதிர்ச்சி.. வியப்பு
காவல்துறையில் எவ்வளவோ போலீசார் கடமை உணர்ச்சியுடனும், சமுதாய அக்கறையுடன் இன்றும்கூட நம் கண் முன் நடமாடி வருகிறார்கள். ஆனால் ஒரு தவறை கண்டித்து, உணர்ச்சி வேகத்தில் தவறாகப் பேசிய நபரை, கிட்டத்தட்ட நாடு கடத்தி கொண்டு வந்து கைது செய்து சிறையில் தள்ளியுள்ள வேகம்.. வியக்க வைக்கவில்லை.. மாறாக அதிர்ச்சியையும், அயர்ச்சியையுமே தருகிறது.
இப்படி கங்கணம் கட்டி கொண்டு கைது செய்து கொண்டிருந்தால், நாளை யார்தான் மற்றொரு தவறை எதிர்த்து கேட்க முடியும்? பேச முடியும்?