பஸ் ஸ்டிரைக்: நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை... அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை: பஸ் ஸ்டிரைக் தொடர்பாக நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
ரூ.7000 கோடி நிலுவைத் தொகை கேட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் ஞாயிற்றுக்கிழமை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 3-ஆவது நாளாக இன்று வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதனால் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் நேற்று பிற்பகலில் பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர் நலத் துறை ஆணையர் யாசிம் பேகம் 47 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
எனினும் அரசு தரப்பில் இருந்து யாரும் வராததால் பேச்சுவார்த்தையை அவர் ஒத்திவைப்பதாக அறிவித்தார். இந்நிலையில் அரசு அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், நாளை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நல துறை அதிகாரிகள், போக்குவரத்து அதிகாரிகள், தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளும் என்றார் அவர்.