திருப்பூர்: தி.மு.க. பிரமுகர்- மனைவி, மகனை கொன்ற டிரைவர் கைது
திருப்பூர்: திமுக பிரமுகரையும் அவரது மனைவி, மகனையும் கம்பியால் தாக்கி கொலை செய்த லாரி ஓட்டுநரை திருப்பூரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் (வயது 55). தி.மு.க. கிளை செயலாளர். லாரி மூலம் தண்ணீர் விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி சாரதாம்பாள் (50). இவர்களுக்கு நவீந்திரன் (20) என்ற மகனும், ஷோபனா (25) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 5ம் தேதி இரவு அவரிடம் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்த ஸ்டாலின் என்ற வாலிபர் சிவசுப்பிரமணியத்தின் மகன் நவீந்திரனை இரும்பு கம்பியால் தாக்கி அடித்து கொன்று உடலை அருகில் உள்ள கிணற்றில் வீசினார். சத்தம் கேட்டு அங்கு வந்த சிவசுப்பிரமணியத்தையும் கடுமையாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே சிவசுப்பிரமணியம் மயங்கி விழுந்தார்.
வீட்டுக்குள் சென்ற ஸ்டாலின் அங்கிருந்த சாரதாம்பாளையும், அவரது மகள் ஷோபனாவையும் தாக்கி அவர்கள் அணிந்திருந்த நகைகளை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்த போது சிவசுப்பிரமணியம், சாரதாம்பாள், ஷோபனா ஆகியோர் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்லும் வழியிலேயே சிவசுப்ரமணியம், சாரதாம்பாள் ஆகியோர் உயிரிழந்தனர். ஷோபனா திருப்பூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று பின்னர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கொலை குறித்து விசாரணை நடத்த திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாயி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் திருநாவுக்கரசு தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் கொலையாளி ஸ்டாலினை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அவர் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. இதையடுத்து ஸ்டாலின் குறித்த நோட்டீஸ் அடித்து பொதுமக்கள் பார்வையில் படும்படி ஒட்டி விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் திருப்பூரில் ஒரு ரகசிய இடத்தில் ஸ்டாலின் தலைமறைவாக இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பதுங்கி இருந்த ஸ்டாலினை கைது செய்து ரகசிய இடத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
முதல் கட்ட விசாரணையில் ஸ்டாலின் வேலைக்கு ஒழுங்காக செல்லாததால் சிவசுப்பிரமணியமும், அவரது குடும்பத்தினரும் கடுமையாக திட்டியுள்ளனர். இதனால் ஆத்திரத்தில் மூவரையும் கொலை செய்தது தெரியவந்துள்ளது.