மானிய ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் பிரதமர் மோடியை அவமதித்ததாகக் கூலித் தொழிலாளி கைது
சென்னை வந்திருந்த பிரதமர் மோடியை அவமதித்த வழக்கில் கூலித்தொழிலாளி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை : மானிய ஸ்கூட்டர் வழங்கும் விழாவிற்கு சென்னை வந்திருந்த மோடிக்கு அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொண்ட கூலித்தொழிலாளியை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி சென்னை வந்து இருந்தார்.
இதற்காக டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னை விமானநிலையம் வந்த மோடி, அங்கிருந்து அடையாறு கடற்படை தளத்திற்கு வந்தார். அங்கிருந்து காரில் கலைவாணர் அரங்கத்திற்கு சென்றார்.
அப்போது அவரை வரவேற்க சாலையின் இருபுறமும் மக்கள் காத்திருந்தனர். கடற்கரை சாலையில் மோடி காரில் வந்தபோது, ஜெயலலிதா நினைவிடம் அருகே நின்ற கூலித்தொழிலாளி ஒருவர் ரகளை செய்ததோடு, பிரதமரை அவமரியாதை செய்யும் வகையிலும் நடந்து கொண்டார்.
இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மோடியை அவமரியாதை செய்த வழக்கில் இன்று அந்த கூலித்தொழிலாளியைக் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து அண்ணா சதுக்கம் காவல்நிலைய போலீஸார் தெரிவிக்கையில், அந்த நபரின் பெயர் பழனி என்பதும் , திருவல்லிக்கேணியில் கூலித்தொழிலாளியாகப் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.