உளுந்தூர்பேட்டை அருகே கோர விபத்து: சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 6 பேர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது கார் மோதிய பயங்கர விபத்தில் சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை: உளுந்தூர்பேட்டை அருகே நிகழ்ந்த கோர விபத்தில் சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
பெருங்களத்தூரைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் தனியார் பல்கலைக் கழகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் தனது மகன் நரேசுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார்.
இதற்காக தஞ்சை மாவட்டம் கருப்பூரில் பெண் பார்த்த அவர் நேற்று நிச்சயதாத்தத்துக்காக குடும்பத்தினருடன் காரில் சென்றார். நிச்சயதார்த்தம் முடிந்ததும் இரவு சுந்தரம் குடும்பத்தினருடன் காரில் சென்னைக்கு திரும்பினார்.
நள்ளிரவில் உளுந்தூர்பேட்டை அருகே வந்தபோது திருச்சி நோக்கி சென்ற லாரி மீது எதிர்பாராதவிதாக கார் மோதியது.இதில் சுந்தரம், அவரது சகோதரி மற்றும் 9 வயது சிறுவன் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்ததும் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.
நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.