தமிழக-கர்நாடக எல்லையில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான லாரிகள்.. சமைத்து சாப்பிடும் டிரைவர்கள்
ஈரோடு: தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் லாரிகள் எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக-கர்நாடக எல்லையான புளிஞ்சூர் பகுதியில் நேற்று இரவு முதலே தமிழக லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பந்த் நடைபெற்றதால், கன்னட அமைப்பினர் கடும் கோபமடைந்துள்ளனர். எனவே தமிழக எல்லையை முற்றுகையிடுவோம் என வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் மிரட்டி வருகிறார்கள்.
இதையடுத்து முன்னெச்சரிக்கையாக தமிழக லாரிகள் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புளிஞ்சூர் பகுதியில், சுமார் ஆயிரம் லாரிகள் இன்று மதியம்வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதேபோல ஒசூர் எல்லையிலும் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லாரி டிரைவர்கள் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு காத்திருக்கிறார்கள். இன்று மாலை 6 மணிக்கு மேல் லாரிகளை கர்நாடக எல்லைக்குள் அனுமதிப்பார்கள் என தெரிகிறது.
கடந்த வருடம் காவிரி தொடர்பாக பதற்றமான சூழல் இருந்தபோது, தமிழக லாரி டிரைவர்கள் கர்நாடகாவில் தாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.