குஷ்பு இட்லி பார்த்திருப்பீங்க... சூடு பறக்கும் ட்ரம்ப் தோசை சாப்பிட்டீங்களா?
அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப் பெயரில் சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்று தோசையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை: டொனால்ட் ட்ரம்ப் பெயரில் தோசையை அறிமுகப்படுத்தியுள்ளது சென்னையில் உள்ள சுப்ரபா என்ற ஓட்டல்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவடைகிறது. புதிய அதிபரை தேர்த்தெடுப்பதற்கு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர். இதில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். அவர், வரும் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில் ட்ரம்பின் வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னை ராமாபுரத்தில் உள்ள 'சுப்ரபா' ஓட்டல் ட்ரம்பின் பெயரில் தோசை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த தோசையின் விலை ரூ.50க்கு விற்பனையாகிறது. வாழை இலையில் மொறுவலாக செய்யப்பட்ட தோசையுடன், ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட சட்னி, சாம்பார் மற்றும் நெய் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து அந்த ஓட்டலை நடத்தி வரும் முகுந்த் தாஸ் கூறுகையில், 'ஒரு ஓவிய கலைஞராக இருந்தால் அவர்களுக்குப் பிடித்தவர்களை ஓவியமாக வரைந்து மாரியாதை செலுத்துவார்கள். நானோ ஓட்டல் உரிமையாளர். எனவே புதுவகை உணவை அறிமுகப்படுத்தி, அதற்கு தனக்குப் பிடித்த நபரான ட்ரம்ப் பெயரை வைத்துள்ளேன். முதலில் சூடு பிடிக்காத வியாபாரம் தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக 130 தோசைகள் விற்பனையாகிறது என்றார் அவர்.