"அக்ரி" கிருஷ்ணமூர்த்தி விடுதலை சட்டத்தின் மீதான நம்பிக்கையை தகர்ந்துள்ளது- ராமதாஸ்
சென்னை: அரசு வேளாண் துறை செயற் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுதலை செய்யப்பட்டுள்ளது, சட்டத்தின் மீதான நம்பிக்கையை தகர்த்துள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கை:
"வேளாண்துறை பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை விடுவித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இதற்காக கூறப்பட்டுள்ள காரணம் சட்டம் மீதான மக்களின் நம்பிக்கையை அடியோடு தகர்த்துள்ளது.
பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கிலிருந்து தம்மை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவின் மீது தான் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. தற்கொலை செய்துகொண்ட பொறியாளர் முத்துக்குமாரசாமியிடம் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கையூட்டு கேட்டார் என்பதற்கு நேரடி ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் அவரை விடுதலை செய்வதாக உயர்நீதிமன்ற நீதிபதி வி.எஸ். ரவி அவர்கள் தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி குறித்தும், சட்டம் குறித்தும் நன்றாக அறிந்த எவரும் இதை ஏற்க மாட்டார்கள். முத்துக்குமாரசாமி தற்கொலைக்கு கிருஷ்ணமூர்த்தி தான் காரணம் என்பதை உறுதி செய்ய எத்தனையோ சந்தர்ப்ப சாட்சியங்கள் உள்ளன; பல வழக்குகளில் இவற்றின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு அத்தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது. ஆனால், இவற்றைக் கருத்தில் கொள்ளாது உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வருத்தமளிக்கிறது.
முத்துக்குமாரசாமி திடீரென மதியம் முடிவெடுத்து மாலையில் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடக்கத்திலிருந்து கடுமையான மன உளைச்சலால் அவதிப்பட்டு வந்த முத்துக்குமாரசாமி ஒரு கட்டத்தில் தமது நற்பெயருக்கு களங்கம் கற்பித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் 20.02.2015 அன்று மாலை தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். முத்துக்குமாரசாமியிடம் பணம் கேட்டு கிருஷ்ணமூர்த்தி நேரடியாக மிரட்டவில்லை... ஆனால், அவரது உத்தரவின் பேரில் பணம் கேட்டு நான் நெருக்கடி கொடுத்தேன் என்று வேளாண்துறையின் தலைமைப் பொறியாளரும், முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் இரண்டாவது எதிரியுமான செந்தில் நெல்லை நீதிமன்ற நீதிபதி முன் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இவ்வளவுக்குப் பிறகும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஊழல் செய்யாத உத்தமர் என கருதி விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் எந்த அடிப்படையில் தீர்மானித்தது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த வழக்கில் பிணை கோரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுக்களை தொடக்கத்தில் தள்ளுபடி செய்த விசாரணை நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் அவர் மீதான குற்றச்சாற்றுகளுக்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் இருப்பதாக கூறின.
61 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு தான் கருணை அடிப்படையில் அவருக்கு நிபந்தனை பிணை கிடைத்தது. அவ்வாறு இருக்கும் போது அவர் மீதான புகாருக்கு ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுதலை செய்வது எந்த வகையில் முறையாக இருக்கும். முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கின் விசாரணை நெல்லை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சாட்சியங்கள், ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இவ்வழக்கின் தீர்ப்பை அந்த நீதிமன்றம் முடிவு செய்ய அனுமதித்திருக்க வேண்டும். அதற்கு மாறாக தமிழகத்தின் மிகவும் பரபரப்பான வழக்கில் உயர்நீதிமன்றமே இப்படி ஒரு தீர்ப்பை வழங்குவதை ஏற்க முடியவில்லை. அரசியல்வாதியும் விடுதலை செய்யப்பட்டு விட்டார். அப்படியானால் அதிகாரி முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்கு யார் காரணம்?
இவ்வழக்கின் தீர்ப்பு திருத்தப்படாவிட்டால் ஊழல்வாதிகளை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். நேர்மையான அதிகாரிகளால் இனி ஊழல் கறைபடியாமல் பணியாற்ற முடியாமல் போய்விடும். எனவே, இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கில் விடுபட்டவர்களையும் சேர்த்து மறு விசாரணை நடத்த காவல்துறைக்கு ஆணையிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.