டிராக்டரை அபகரித்த பைனான்ஸ் கம்பெனி.. கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயி
தூத்துக்குடியில் டிராக்டரை மீட்க கோரி விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே உள்ள கோவிந்தன் பட்டியைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் கனகராஜ் 42.
விவசாயியான இவர், தனியார் நிறுவனத்திடம், பைனான்ஸ் மூலம் ரூ.12 லட்சத்திற்கு டிராக்டர் வாங்கியதாகவும், அதற்கான முன்பணமாக 3 லட்சம் ரூபாய் முன்பணமாக கட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், முறையாக மாத தவணையும் செலுத்தி வந்துள்ளார். ஆனால், அவர் செலுத்திய தொகையை டிராக்டர் நிறுவனர், நிதி நிறுவனத்தில் கட்டவில்லை என தெரிகிறது.
இதனால் கடந்த வெள்ளிக்கிழமை நிதி நிறுவனத்தினர் டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக கனகராஜ் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்திருந்தார்.
இந்நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க கனகராஜ் வந்தார். அப்போது திடீரென்று தான் கொண்டுவந்திருந்த 5 லிட்டர் மண்ணெண்ணெய் தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இனஸ்பெக்டர் அரிஹரன் தலைமையிலான போலீசார் அதிர்ந்துபோய் அவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.