சுருட்டிப் போட்ட சுனாமி... 13 ஆண்டுகளாக மாறாத சோகம்- கடற்கரையில் கண்ணீர் நினைவுகள்
தமிழகத்தினைச் சுழற்றியடித்துச் சென்ற 'சுனாமி' என்னும் ஆழிப்பேரலை விட்டுச் சென்ற நினைவுகளின் 13வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.
Recommended Video
சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களை சுனாமி சுருட்டிப்போட்டதன் 13 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மெரீனா கடற்கரை தொடங்கி குமரி கடற்கரை வரை உள்ள மீனவ கிராம மக்கள் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேஷியா அருகே கடலில் பாறைத் தட்டுகள் சரிந்ததால் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி என்னும் ஆழிப்பேரலை உருவானது. இது வலுவடைந்து இந்திய பெருங்கடலில் ஆழிப்பேரலையை உருவாக்கி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடலோரப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தில் சிக்கி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோரங்களில் வசித்தவர்களும், கடற்கரைகளுக்கு சென்றவர்களும் உயிரிழந்தனர். பலத்த பொருள் சேதமும் ஏற்பட்டது. பலர் தங்கள் உடமைகளையும் இழந்தனர்.
கண்ணீர் அஞ்சலி
சுனாமியில் கன்னியாகுமரி, நாகை, கடலூர் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாகை மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக கடலூரில் சுமார் 600 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதனையடுத்து ஆண்டுதோறும் டிசம்பர் 26ஆம் தேதி அன்று சுனாமி நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்று கறுப்பு தினமாக அனுசரித்து மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. மீன் சந்தைக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
பால் ஊற்றிய மக்கள்
ஆழிப்பேரலைக்கு உறவுகளை காவு கொடுத்த மக்கள் ஆங்காங்கே மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தும், சுனாமி தாக்கிய கடற்கரைகளில் மலர் தூவியும் மறைந்த தங்கள் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பால் ஊற்றியும் தங்களின் சோகத்தை நினைவு கூர்ந்தனர்.
800 பேரை காவு கொண்ட சுனாமி
குமரி மாவட்டத்தில் 800க்கும் மேற்பட்டவர்களை பலிகொண்ட சுனாமி ஆழிப்பேரலையின் 13ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. குமரி கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியதில் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் வசித்து வந்தவர்கள், சுற்றுலா வந்தவர்கள் என 800க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். ஏராளமானோர் காணாமல்போயினர். உறவுகளை இழந்தவர்கள் இன்றும் மாறாத சோகத்தில் இருக்கின்றனர்.
கொத்து கொத்தாக மரணம்
கடற்கரை கிராமங்களில் நினைவு திருப்பலிகள், மவுன ஊர்வலங்கள், மலரஞ்சலி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் 199 பேர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்திலும் 119 பேர் பலியான மணக்குடி கல்லறை தோட்ட பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கரை திரும்பாத மீனவர்கள்
கடந்த 29 மற்றும் 30ம் தேதிகளில் வீசிச்சென்ற ஓகி புயலின் கோரத்தாண்டவம் உணர்த்தி சென்றுள்ளது. ஓகி புயலால் குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்களில் 8 பேர் இறந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் 243 பேர் மாயமாகி இதுவரை கரை திரும்பாத காரணத்தால் குமரி மாவட்ட கடலோர கிராமங்களில் கண்ணீரும் சோகமுமாய் மக்கள் காணப்படுகின்றனர்.