ஜனவரி 1ல் ஏழுமலையானை தரிசனம் செய்ய நவ.7ல் முன்பதிவு: வைகுண்ட ஏகாதசி முன்பதிவு இல்லை!
திருப்பதி - திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய முன்பதிவு செய்வதற்கான வசதி முக்கிய நகரங்களில் உள்ளது. அந்த மையங்களில் ரூ. 50 தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் திருப்பதியில் 2014-ல் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டு தின சிறப்பு தரிசனத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நாடெங்கும் உள்ள மையங்களில் டிக்கெட்டுக்களை முன் பதிவு செய்யலாம்.
இந்த முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. மொத்தம் 25 ஆயிரம் டிக்கெட்டுகளே வழங்கப்பட உள்ளன.
சென்னையில் தியாகராய நகரில் உள்ள திருப்பதி - திருமலை தேவஸ்தானத்தில் முன்பதிவு செய்யலாம். புத்தாண்டு தினத்தன்று கோவிலில் கடும் கூட்டம் இருக்கும் என்பதால் சிறப்பு டிக்கெட் விற்பனை இப்போதே தொடங்கியுள்ளது.
ஜனவரி 11-ந்தேதி வைகுண்ட ஏகாதசி நடைபெற உள்ளது. எனவே அன்று தரிசனத்துக்கு ரூ. 50 இ-தர்சன் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.