லக்சஸ் கார் மோசடி வழக்கில் டி.டி.வி தினகரனின் சகோதரர் பாஸ்கரனுக்கு ஜாமீன்!
லக்சஸ் கார் மோசடி வழக்கில் டி.டி.வி தினகரனின் சகோதரர் பாஸ்கரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை : போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்து லக்சஸ் கார் வாங்கிய வழக்கில் டி.டி.வி தினகரனின் சகோதரர் பாஸ்கரனுக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.
லண்டனில் இருந்து 1994ம் ஆண்டு லக்ஸஸ் நிறுவனத்தின் காரை போலி ஆவணங்கள் கொடுத்து இறக்குமதி செய்ததன் மூலம் ரூ. 1.62 கோடி மோசடி செய்ததாக சசிகலாவின் கணவர் நடராஜன், டி.டி.வி தினகரனின் சகோதரர் பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து நடராஜன், பாஸ்கரன் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
இதனால் இந்த வழக்கில் இருந்து சரணடைய இருவருக்கும் விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், அந்த உத்தரவு தங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்று கூறி சிபிஐ நீதிமன்றம் இருவரையும் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இந்நிலையில், நடராஜன் மற்றும் பாஸ்கரன் இருவரும் உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று கடந்த 15ம் தேதி உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து டி.டி.வி தினகரனின் சகோதரர் பாஸ்கரன், சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைந்து ரூபாய் 25,000 செலுத்தியதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.