கறுப்பு வெள்ளை சிவப்புக் கொடியில் ஜெயலலிதா... 108 அடி உயர கம்பத்தில் கொடி ஏற்றிய டி.டி.வி தினகரன்
மதுரை மேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் புதிய கட்சிக்கொடியை 108 அடி உயர கம்பத்தில் ஏற்றினார் டி.டி.வி தினகரன் .
Recommended Video
மதுரை : மதுரை மேலூரில் நடந்த கட்சி பெயர் அறிவிப்பு மற்றும் கொடி அறிமுக விழாவின் தனது கட்சிபெயரை அறிவித்து கொடியை அறிமுகம் செய்துவைத்தார் ஆர்.கே நகர் சட்டசபை உறுப்பினர் டி.டி.வி தினகரன்.
மதுரை மாவட்டம் மேலூரில் டி.டி.வி தினகரன் தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை இன்று அறிமுகப்படுத்தினார். இன்று காலை 8.30 மணியளவில் தொடங்கிய பொதுக்கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
டி.டி.வி தினகரனுடன் தகுதிநீக்க வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கும் 18 எம்.எல்.ஏ.,க்களும் கலந்துகொண்டனர். முன்னதாக தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பேசினர்.
அதற்கு அடுத்தபடியாக 10.20 மணிக்கு டி.டி.வி தினகரன் தனது பேச்சைத் துவங்கினார். அப்போது, ' பன்னீர் அன்ட் கோ கொடுத்த மனுவால் இரட்டை இலை சின்னத்தை முடக்கியதால் ஆர்.கே.நகரில் அ.இ.அ.தி.மு.க. அம்மா அணி என்கிற பெயரில் தொப்பி சின்னத்தில் முதலில் நின்றோம்.
அதற்கு அடுத்து குக்கர் சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்டு திமுக, அதிமுகவை தோற்கடித்தோம். இனி தனி இயக்கமாகச் செயல்படப்போகிறோம். விரைவில் அதிமுகவை கைப்பற்றி ஆட்சியமைப்போம் என்று சூளுரைத்தார் டி.டி.வி தினகரன்.
தனது கட்சியின் பெயரான, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அறிவித்து, கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சிக்கொடியில் கறுப்பு, வெள்ளை, சிவப்பு கொடியில் நடுவில் ஜெயலலிதா படம் இடம்பெற்றிருக்கிறது.
அதற்கடுத்து 15 நிமிடங்கள் பேசிய தினகரன், 108 அடி பிரமாண்ட கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். அதன்பின் கட்சியின் உறுப்பினர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டன.
திமுகவின் கொடி கறுப்பு சிவப்பு. திமுகவில் இருந்து பிரிந்த எம்ஜிஆர் அண்ணா திமுக என்ற கட்சியை தொடங்கிய போது கறுப்பை வெள்ளை சிவப்பு நிறத்தில் அண்ணாவின் உருவம் கொண்ட கொடியை அறிமுகம் செய்தார். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு பல கட்சிகள் உருவாகியுள்ளன.
ஜெ தீபா பேரவையை தொடங்கி எம்ஜிஆர் ஜெயலலிதா உருவம் கொண்ட கொடியை அறிமுகம் செய்தார். இப்போது டிடிவி தினகரன் தனது அமைப்பு கொடியில் ஜெயலலிதா உருவத்தை வைத்துள்ளார். இந்த அமைப்பும், கொடியும் இரட்டை இலையை மீட்கும் வரைதான் என்றும் கூறியுள்ளார்.