ஆக. 14 முதல் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம்.. டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு!
சென்னை: ஆகஸ்ட் 14ம் தேதி முதல் மாநிலம் தழுவிய அளவில் சுற்றுப் பயணம் செல்ல உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு அதிமுக கோஷ்டிகளும் இணைய டிடிவி தினகரன் கொடுத்த கெடு இன்றோடு முடியும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தினகரன் செய்தியாளர் சந்திப்பு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால், டிடிவி தினகரன் அறிவிப்பு என்னவாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நாளை அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ளாரா அல்லது மாநிலம் தழுவிய சுற்றுப் பயணம் குறித்து அறிவிக்க உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கட்சிக்கு புதிய நிர்வாகிகளை அறிவிக்க உள்ளாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.
ஆனால் பிரஸ் மீட் செய்யாத தினகரன், அறிக்கையொன்றை மீடியாக்களுக்கு அனுப்பியுள்ளார். அதில் வரும் 14ம் தேதி முதல் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செல்ல உள்ளதாகவும், 14ம் தேதி மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து சுற்றுப் பயணம் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் தினகரன். ஆக. 23 - வடசென்னை வடக்கு மாவட்டம், ஆக. 29 - தேனி மாவட்டம், செப். 5 - கரூர் மாவட்டம், செப்.12-தஞ்சாவூர், செப்.23 நெல்லை, செப்.26 தருமபுரி, செப்.30 திருச்சி, அக்டோபர் 5 சிவகங்கை, என மாவட்ட வாரியாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார் தினகரன். இதன் மூலம் நாளை அவர் அதிமுக தலைமை அலுவலகம் செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.