போயஸ் கார்டனில் தலைமை அலுவலகம்?! - 'திடீர்' சுறுசுறுப்பில் தினகரன்
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் இருக்கிறார் தினகரன். ' கட்சியின் தலைமை அலுவலகத்தைத் திறப்பது குறித்துத்தான் தீவிர யோசனையில் இருக்கிறார். வரும் 5ம் தேதிக்குள் போயஸ் கார்டனில் புதிய அலுவலகம் திறக்கப்படலாம்' என்கின்றனர் அ.ம.மு.கவினர்.
ஆர்.கே.நகர் சட்டமன்றத் தேர்தலில் வென்ற பிறகு, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லத் திட்டமிட்டார் தினகரன். அதற்கேற்ப, சில மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேசி வந்தார்.
நடராஜன் மரணமும் அதையொட்டி குடும்பத்தில் திவாகரனுடன் ஏற்பட்ட மோதலும் தினகரனுக்கு சவாலாக அமைந்தது.
திவாகரனை ஓரம் கட்டிய தினகரன்
"அரசியல்ரீதியாக எந்தப் பிரச்னையும் சமாளிக்கத் தெரிந்த தினகரனுக்கு, திவாகரனை ஓரம் கட்டுவதில் ஆரம்பத்தில் சிரமம் இருந்தது. விவேக்கை வீழ்த்துவதற்கு அனைத்து யுக்திகளையும் கையாண்டார். விவேக்கின் கணக்கு வழக்குகளில் சசிகலா திருப்தியடைந்ததால், அவரை ஓரம்கட்டும் முயற்சி தோல்வியடைந்தது. அரசியல்ரீதியாக திவாகரன் செய்த செயல்கள், தினகரனுக்கு சாதகமாகிவிட்டது" என விவரித்த குடும்ப பிரமுகர் ஒருவர்,
விவேக் ஒதுங்கியுள்ளார்
'சசிகலாவிடம் இருந்து திவாகரனுக்கு எதிராக அறிக்கை வாங்கியதுதான் தினகரன் செய்த வாழ்நாள் சாதனை. இனி தினகரனுக்கு எதிராகக் குடும்பத்தினர் யாரும் வரிந்து கட்டிக் கொண்டு வர மாட்டார்கள். அந்தளவுக்கு அனைவரையும் ஓரம்கட்டிவிட்டார். அவரது அரசியல் மூவ்களை அறிந்து கொண்டதால், விவேக்கும் அவரிடம் இருந்து சற்று விலகியிருக்கிறார். கடந்த சில நாட்களாகவே சுறுசுறுப்பாக வலம் வருகிறார் தினகரன்.
கட்சி அலுவலகம்
சென்னை, அசோக் பில்லர் அருகில் இருக்கும் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவின் வீட்டை, சீரமைப்பு செய்யும் வேலைகள் நடந்து வந்தன. கட்சியின் தலைமை அலுவலகத்தை வடிவமைக்கும் வேலையில் தீவிரமாக இருந்தார் தினகரன். அந்த வீட்டில் ஏறக்குறைய அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துவிட்ட நிலையில், திடீர் என வேறு முடிவை எடுத்திருக்கிறார். போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டுக்கு எதிரிலேயே கட்சி அலுவலகத்தைத் திறக்க இருக்கிறார். இது சொந்தக் கட்டடம் என்றும் சொல்கிறார்கள். வரும் 5ம் தேதி புதிய அலுவலகக் கட்டடத்தைத் திறக்க இருக்கிறார் டி.டி.வி" என்றார்.
போயஸ் கார்டன்
" சசிகலா குடும்பத்தைப் பொறுத்தவரையில், எதைச் செய்வதாக இருந்தாலும் ஜோதிடர்களின் ஆலோசனைப்படிதான் செயல்படுவார்கள். அசோக் பில்லர் அலுவலகம் குறித்து ஜோதிடர்கள் கூறிய முரண்பாடான கருத்துக்கள்தான், போயஸ் கார்டனை நோக்கி தினகரனைத் தள்ள வைத்தது. தவிர, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் மையமாக போயஸ் கார்டன் இருந்தது. வேறு இடத்தைப் பார்ப்பதைக் காட்டிலும், 'கார்டன் முகவரியே பலன் தரும்' என்ற முடிவுக்கு வந்தார்" என்கிறார் அ.ம.மு.க நிர்வாகி ஒருவர்.