டிடிவி தினகரன் 50.32% வாக்குகள்... பாதிக்கு பாதி அள்ளியது எப்படி?
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 50.32 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 50.32 சதவிகித வாக்குகளைப் பெற்றார். அதிமுகவின் மதுசூதனன் 27.31% வாக்குகளையும் பெற்றார். 13.9% வாக்குகளை மட்டுமே பெற்றார் திமுகவின் மருதுகணேஷ்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆளுங்கட்சி வேட்பாளர் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இது 2016ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆர்.கே. நகரில் ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாகும்.
தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஆளுங்கட்சியை ஒரு சுயேட்சை வேட்பாளர் வீழ்த்தி சரித்திர சாதனை படைத்துள்ளார்.
முதல் சுற்றில் இருந்து 19 சுற்றுவரை டிடிவி தினகரனே முதலிடத்தில் இருந்தார். வாக்கு எண்ணிக்கையில் மதுசூதனனைவிட அதிக வித்தியாசத்திலேயே வந்து எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் அணியினரை கலக்கத்தில் ஆழ்த்தினார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு நடந்த இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி, எதிர்கட்சியை எதிர்த்து சுயேச்சையாக களமிறங்கிய டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றுள்ளார். 89013 வாக்குகள் பெற்றுள்ளார் தினகரன். கடந்த 2016 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட 1162 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
இந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் 50.32 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுகவின் மதுசூதனன் 27.31% வாக்குகளையும் பெற்றார். 13.9% வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட்டை பறிகொடுத்தார் திமுகவின் மருதுகணேஷ்.
வாக்காளர்களை சரியாக கவனித்து பாதிக்கு பாதி வாக்குகளை அள்ளியுள்ளார் டிடிவி தினகரன். ஒரு சுயேச்சை சின்னத்தை சரியாக 20 நாட்களுக்குள் மக்களிடம் கொண்டு சென்று வெற்றி வாகை சூடியுள்ளார் தினகரன்.