மறைந்த நடராஜனின் உடலுக்கு டி.டி.வி தினகரன், விவேக் ஜெயராமன் ஆகியோர் நேரில் அஞ்சலி
மறைந்த நடராஜனின் உடலுக்கு டி.டி.வி தினகரன், விவேக் ஜெயராமன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
Recommended Video
சென்னை: மறைந்த ம.நடராஜனின் உடலுக்கு, ஆர்.கே.நகர் சட்டசபை உறுப்பினர் டி.டி.வி தினகரன், விவேக் ஜெயராமன், ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அதனையடுத்து உடல்நலம் பெற்ற அவருக்கு, சில நாட்களுக்கு முன்பு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதனையடுத்து சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். மிகவும் கவலைக்கிடமான முறையில் இருந்த அவருக்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார்.
அஞ்சலிக்காக சென்னை பெசண்ட் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு வைகோ, பழ.நெடுமாறன், வைரமுத்து, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், நடராஜனின் உடலுக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா நேரில் அஞ்சலி செலுத்தினார். பி.ஆர்.ஓ.,வாக தென் ஆற்காடு மாவட்டத்தில் நடராஜன் பணியாற்றியபோது, அங்கு ஆட்சியராகப் பணியாற்றியவர் சந்திரலேகா.
இதனையடுத்து ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினரும் சசிகலாவின் உறவினருமான டி.டி.வி தினகரன் தனது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார். ஜெயா டிவி தலைமை நிர்வாக அதிகாரி விவேக் ஜெயராமனும் நடராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.